மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய மீனவர்கள் அச்சம்
மன்னார் பள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி வேண்டும் எனக் கோரியமைக்கு, குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகக் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 13ஆம் திகதி இரவு நேரத்தில் நாச்சிகுடா வலைப்பாடு எல்லைப் பகுதியில் இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் கடற்படையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களுடைய மீன்பிடி உபகரணம் மற்றும் ஒரு தொலைபேசியையும் கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மீனவர்களை இன்றைய தினம் வியாழக்கிழமை(15) நேரில் சந்தித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடற்படையினரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு அச்சப்படுகின்றனர். தாக்குதலை மேற்கொண்ட கடற்படையினர் முறைப்பாடு செய்ய வேண்டாம் எனக் குறித்த மீனவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவித்தனர்.
குறித்த மீனவர்கள் கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மன்னார் பள்ளிமுனை கிராமத்திலிருந்து இரவு 10 மணியளவில் பள்ளிமுனை கடற்படையிடம். உரிய முறையில் பதிவுகளை மேற்கொண்டு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் வலைப்பாடு நாச்சிகுடா கடல் எல்லையை அண்மித்த பகுதியில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இன்றைய (15) தினம் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரடியாகச் சென்று பார்த்த பொழுது மீனவர்களை மிகவும் கேவலப்படுத்தித் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்றனர். தாக்குதல் மேற்கொண்டதற்கான எந்த ஒரு காரணமும் கடற்படையால் மீனவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
அதே நேரம் அவர்களிடம் இருந்த தொலைபேசியையும் பறித்துச் சென்றுள்ளனர். அதே நேரம் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்ட சமயத்தில் அங்கிருந்த மீனவர்கள் தாக்குதலைக் காணொளிப் பதிவு செய்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து தொலைபேசிகளையும் பறித்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் கடற்றொழில் திணைக்களத்திடம் வினவியதாகவும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தற்போது விடுமுறையில் இருப்பதாகவும் இது தொடர்பாகத் தான் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதே நேரம் கடற்றொழில் அமைச்சரிடமும் குறித்த விடயம் தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், குறித்த மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு நீதி வேண்டும் எனக் கோரியதாகவும், குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகக் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இலங்கையின் படை தரப்புக்கள் அனைத்து தமிழ் மக்களை
அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும், அச்சுறுத்தி தமிழ் மக்களின் குரலை
ஒடுக்குகின்ற செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும்,
அந்த வகையில் இந்த மீனவர்கள் மீதான தாக்குதலும் இடம் பெற்றுள்ளதாகவும், இதே
பேன்று ஒரு அச்சுறுத்தல் மத்தியிலேயே தமிழ் மக்கள் வாழவேண்டிய ஒரு சூழ் நிலை
காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.