மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுவிஸ் நாட்டில் உள்ள ஒருவர், தமது கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவருக்குச் சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசியதை கண்டித்தே அவர்கள் இவ்வாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
சுவிட்சர்லாந்திலே இருக்கின்ற ஒருவர் எமது பிரதேசத்தில் அமைந்துள்ள ஒந்தாச்சிமடம் கிராம உத்தியோகத்தருக்கு அவரது கடமையை அவதூறு செய்யும் வித்திலும், கடமையை இழிவுப்படுத்தும் விதத்திலும், சமூக வலைத்தளத்தில் மிகவும் அவதூறு வார்த்தைகளைத் தெரிவித்திருக்கின்றார்.
நாங்கள் இலங்கை அரசாங்கத்தின் சுற்று நிரூபத்திற்கமைவாகவும், சட்டத்திட்டத்திற்கமைவாகவும் தான் கடமையாற்றி வருகின்றோம். வெளிநாட்டிலிருக்கின்றவருடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய வகையிலும், அவர் கொடுக்கின்ற விடயங்களை உறுத்திப்படுத்தக்கூடிய வகையிலும், அவருக்குத் தேவையான வகையில் அவருக்கு விசுவாசமாக நாங்கள் செயற்படவில்லை.
கோவிட் தாக்கம் மற்றும் ஏனைய இயற்கைத் தாக்கங்களுக்கு மத்தியிலும், பல இன்னல்களைச் சுமந்தவண்ணம் மிகவும் விசுவாசமாகக் கஷ்டப்பட்டுக் கடமையாற்றி வருகின்ற கிராம உத்தியோகத்தர்களை, வெளிநாட்டில் மிகவும் உல்லாசமாக வாழ்ந்து வருகின்ற குறித்த நபர் அவதூறாகப் பேசியதோடு எமக்குக் கொலை அச்சுறுத்தலும் விடுத்திருக்கின்றார்.
இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தொடர்பில் குறித்த நபருக்கு எதிராக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கருத்திற் கொண்டு, எமது கிராம உத்தியோகத்தர்கள் எதிர்ப்புக் கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம்.
இக்கட்டான காலகட்டத்தில் கடமையாற்றி வரும் எமது சக உத்தியோகத்தர்களை வெளிநாட்டில் உல்லாசம் அனுபவித்து வருபவர்கள் மிரட்டுவது எந்தவொரு நேரத்திலும், எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
எனவே கிராம உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பின்மையும், சொற்களினால் அவதூறான வார்த்தைகள் தெரிவிப்பதையும் நிறுத்த வேண்டும். ஒரு அரச உத்தியோகத்தரை அவர் விரும்பியவாறு கடமையாற்றுமாறு பணிப்பது குற்றமாகும். இதனை கிராம உத்தியோகத்தர்களாகிய நாங்கள் அவரை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்விடயம் தொடர்பில் எமது திணைக்களத் தலைவருக்கும், எமது ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்திற்கும், தெரிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்துள்ளோம்.
இது தொடர்பில் இரகசியப் பொலிஸாரும் எம்மிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர் எனக் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உத்தியோகத்தர்கள் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினமிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.











யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
