சஜித் தரப்பின் அழைப்பினை நிராகரித்த மங்கள
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பினை முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜயவிக்ரம அண்மையில் மங்களவை மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு பகிரங்கமாக அழைத்திருந்தார்.
1988ம் ஆண்டில் தாம் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் லிபரல் கொள்கைகளை அதிகம் பின்பற்றும் கட்சியாக காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவே இதுவரை ஆட்சி வகித்த ஜனாதிபதிகளில் அதிகளவில் லிபரல் கொள்கைகளை பின்பற்றியவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை ஆட்சி பீடத்தில் ஏற்றும் பிரச்சாரப் பணிகளில் முன்னின்று செயற்பட்ட போதிலும், ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னரான அவரது கொள்கைகளில் உடன்பாடு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொள்கைகளும் ஒரே விதமானவை எனவும் இதனால் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ள விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.