பாலைமரக்குற்றிகளை கடத்தியவர் கைது(Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார் காட்டுப்பகுதியிலிருந்து சல்லிக்கல்லு ஏற்றும் கனரக வாகனத்தில் அதிகளவான பாலைமரக்குற்றிகளை ஏற்றிக் கடத்திச்செல்ல முற்பட்டவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
14.01.2022 இன்று காலை உடையார் கட்டு தெற்கு பகுதியில் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான அறுத்த பாலை மரக்குற்றிகளை கனரக வாகனத்தில் ஏற்றி அதன் மேல் சல்லிக்கல்லுகள் ஏற்றப்பட்டுக் கடத்தப்படுவதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
குறித்த தகவலுக்கு அமையப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய குழு ஒன்று சென்று குறித்த கனரக வாகனத்தைப் பிடித்துள்ளதுடன் சாரதியினை கைது செய்துள்ளார்கள்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இவ்வாறான கடத்தல் சம்பவம் இடம்பெற்று வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசுவமடு பகுதியினை சேர்ந்த கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், கனரக வாகனம் மரக்குற்றிகள், சல்லிக்கல்லுகளும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்த புதுக்குடியிருப்ப பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்துவருவதுடன், நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.