சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகனத்தை கொழும்பில் எதிர்த்தவர் கைது
சீன பாதுகாப்பு அமைச்சரை ஏற்றிய வாகன பேரணிக்கு, வாகன ஒலி எழுப்பி எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையை ஒழுங்கு செய்தமை தொடர்பில் கைதான நபருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கொழும்பு - பொரளை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சீனப் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் இலங்கை விஜயம் செய்திருந்த போது வாகனங்களில் ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளியிட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முக்கிய பிரபு ஒருவரின் வருகைக்காக வீதிகள் முடக்கப்படுவதற்கு, 31 வயதான இளைஞர் ஒருவர் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
கடந்த 27ஆம் திகதி பொரளை சந்தியில் சீனப் பாதுகாப்பு அமைச்சர் பயணித்த வாகனத் தொடரணிக்கு இவ்வாறு வாகனங்களில் ஒலி எழுப்பப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
முக்கிய பிரபுக்கள் வீதியில் செல்வதற்காக பொதுமக்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்ற அடிப்படையில் குறித்த இளைஞர் கருத்து வெளியிட்டதுடன், ஏனையவர்களையும் வாகனங்களில் ஒலியை எழுப்பி எதிர்ப்பை வெளியிடுமாறு கோரியிருந்தார்.
இந்த இளைஞரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பெரும் எண்ணிக்கையிலான சாரதிகள் ஒலி எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், ஒலி எழுப்பி எதிர்ப்பை வெளியிடும் போராட்டத்தை ஒழுங்கு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை மற்றும் சட்டவிரோத ஒன்றுகூடல் ஆகிய குற்றச்சாட்டில் குறித்த இளைஞரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய வல்லரசுகளில் ஒன்றான சீனாவின் பாதுகாப்பு அமைச்சருக்கு அதி உச்ச பாதுகாப்பு வழங்க வேண்டியது இலங்கையின் கடப்பாடு எனவும், வியன்னா உடன்படிக்கையின் அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே வீதியில் வாகனங்களின் போக்குவரத்து முடக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளா அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.