ஆபாச இணையத்தளம் நடாத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது
ஆபாச இணையத்தளம் ஒன்றினை நடாத்தித் தகாத நடவடிக்கைகளுக்காகச் சிறுமிகள், பெண்களின் புகைப்படங்களை விளம்பரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
15 வயதான சிறுமி ஒருவர், இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில், சிறுமிகள், பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யும் வலையமைப்பு தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அதற்கான மேலதிக உதவிகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் பகுப்பாய்வுப் பிரிவு ஊடாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன் பிரகாரம் அடையாளம் காணப்பட்ட ஆபாச இணையத்தளம் ஒன்றினை நடாத்தி வந்த இரத்தினபுரி, கலவானை - தவுலகல பகுதியைச் சேர்ந்த 29 வயதான களுபோவிலகே சுரேஷ் தர்ஷன களுபோவில என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் முன்னெடுத்துச் சென்ற ஆபாச இணையத்தளத்தில் அதிகமான சிறுமிகள், பெண்களின் புகைப்படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததாகச் சந்தேகநபரை மன்றில் ஆஜர் செய்து சி.ஐ.டி.யினரால் மன்றுக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 15 வயதான சிறுமி ஒருவர், இணையத்தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில், இதுவரை 46 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.