ஐரோப்பா செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்தவருக்கு அதிர்ச்சி
போலி பிரித்தானிய கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற ஈரானிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஈரானிய நாட்டவர் 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்லை கண்காணிப்புப் பிரிவு
அவர் நேற்று முன்தினம் இரவு 08.00 மணிக்கு ஜப்பானின் நரிட்டாவுக்குப் புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்திருந்தார்.
அவரது விமான டிக்கெட்டை பரிசோதனை செய்த போது, அவர் வழங்கிய பிரித்தானிய கடவுச்சீட்டில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரது அனைத்து ஆவணங்களுடனும் அவரை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்பியுள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனைகளில் கடவுச்சீட்டு போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி கடவுச்சீட்டிற்காக அவர் உள்ளூர் தரகரிடம் 15,000 அமெரிக்க டொலர்கள் செலுத்தியிருப்பதும் தெரியவந்தது.
ஈரானிய கடவுச்சீட்டு
அவரது பண பொதியை பரிசோதனை செய்ததில் அவரது உண்மையான ஈரானிய கடவுச்சீட்டு மற்றும் ஜப்பானின் நரிட்டாவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு விமான டிக்கெட் இருப்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஈரானிய நாட்டவர் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



