கைவிலங்கைப் பயன்படுத்தி கைவரிசை காட்டியவர் கைது
சிறையிலிருந்து வெளியே வரும்போது திருடிக்கொண்டு வந்த கை விலங்கைப் பயன்படுத்தி பொலிஸார் எனத் தெரிவித்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிருலப்பனை பூர்வாராம பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து 5 ஆயிரத்து 900 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 34 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி என்றும், போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹெரோய்ன் விற்பனை தொடர்பில் குறித்த சந்தேகநபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கிருந்து கைவிலங்கைத் திருடிக்கொண்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தொடர்பில் பம்பலப்பிட்டிப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சி.சி.டி.வி. காட்சிகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமையவே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரிடமிருந்து ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பணமும், 40 இலட்சம் ரூபா பெறுமதியான கார், கத்தி, கைவிலங்கு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
