மாணவரொருவரை மிரட்டி பணம், நகை பறித்த அவரின் நண்பர் கைது
பெற்றோரை வெட்டப் போவதாக மிரட்டி மாணவனிடம் பணம், நகை என்பவற்றை பறித்த, குறித்த மாணவனின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முகநூலில் போலி கணக்கொன்றின் மூலம் உரையாடி பணம், நகை என்பவற்றினை தருமாறும் அப்படி தராவிட்டால் மாணவனது பெற்றோரை வெட்டப்போவதாகவும் அவரது நண்பர் மிரட்டியுள்ளார்.
இதற்கு பயந்த குறித்த மாணவன், சந்தேகநபர் கேட்ட பணத்தையும், நகையையும் அவர் சொன்ன இடத்திற்கு கொண்டு சென்று வைத்துள்ள நிலையில் பின்னர் சந்தேகநபர் அவ்விடத்திற்கு வந்து அவற்றினை எடுத்துச் சென்றுள்ளார்.
இது இவ்வாறு தொடர்ந்து சில நாட்கள் நடைபெற்று வந்துள்ள நிலையில் நகை மற்றும் பணம் தொடர்பில் மாணவனது பெற்றோர் அவரிடம் வினவியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மிரட்டல் சம்பவம் தொடர்பில் மாணவன், பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகநபரை நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 3 மோதிரங்கள், 3 சங்கிலிகள், 3 வளையல்கள், ஒரு சோடி தோடு மற்றும் 2 இலட்சத்து பத்தாயிரம் ரூபா என்பவற்றினை வாங்கியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சந்தேகநபர் குறித்த நகைகளை நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ள நிலையில், அடகு வைத்ததற்காக வழங்கப்பட்டுள்ள ஆவணங்களை சந்தேகநபரிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மாணவனை மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.