மட்டக்களப்பு விமானப்படை தளத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த ஒருவர் கைது
மட்டக்களப்பு விமான நிலைய விமானப்படைத் தளத்திற்குள் அனுமதியின்றி விமானப்படையின் சோதனைச்சாவடி ஊடாக உள்நுழைந்த ஆண் ஒருவரை இன்று கைது செய்து ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விமான நிலையத்தில் பல்வேறு தரப்பட்ட வேலைகளில் ஊழியர்களாக வேலை செய்துவரும் பணியாளர்கள் தினமும் விமான நிலையம் சென்று பணியாற்றிவிட்டு மாலையில் வீடுதிரும்பி வருவது வழக்கம்.
இந்த நிலையில் சம்பவ தினமான இன்று காலை 8 மணியளவில் வழமைபோல விமானநிலையத்துக்கு வேலைக்குச் செல்லும் பணியாளர்களுடன் பணியாளராக விமான நிலையத்திற்குள் விமானப்படையின் சோதனைச்சாவடி ஊடாக வாழைச்சேனை மீராவேரடயைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் உள்நுழைந்துள்ளார்.
இவ்வாறு உள்நுழைந்தவர் அங்குள்ள விமானப்படைத் தரைப்பகுதிக்குச் சென்ற நிலையில் சந்தேகம் கொண்ட விமானப்படையினர் குறித்த நபரிடம் அனுமதி அட்டை கேட்டபோது அவர் தேசிய அடையாள அட்டையைக் காட்டியதையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருவதாகவும், இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மனைவியைக் கொண்டுவந்து விட்டுவிட்டு அதன் பின்னர் விமான நிலையத்தைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளதாகவும், அதன்போது அங்கு விமான நிலையத்தினுள் வேலைக்கு உட்செல்பவர்களுடன் ஒன்றித்து விமான நிலைய சோதனைச்சாவடியை கடந்து உட்சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இjன்போது கைது செய்யப்பட்டவரை விமான படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும்,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்புடுகின்றது.