மாவடிப்பள்ளி ஆற்றில் கரையொதுங்கிய ஆணின் சடலம் - அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு
புதிய இணைப்பு
அம்பாறை - மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இன்று (13.09.2026) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, குறித்த சடலம் சாய்ந்தமருது, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய அஸ்ஜத் என்ற இளைஞனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (13) மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அம்பாறை- மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று(13.9.2026) கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார், சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட நடவடிக்கை
அத்துடன், அவர் நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா என்பது தொடர்பிலும் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளைக் காரைதீவு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.