இலங்கை கடற்படை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
சோமாலிய கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தலைத் தடுக்கும் வகையில் வர்த்தகக் கப்பல்களுக்கான பாதுகாப்புப் பணிகளில் இலங்கை கடற்படையினரை ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சோமாலியக் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2010ம் ஆண்டு தொடக்கம் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளை கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் மிகுந்த பிரதேங்களாக சர்வதேச கடற்போக்குவரத்து சங்கம் அறிவித்திருந்தது.
அதன் காரணமாக குறித்த பிரதேசங்கள் ஊடாக பயணிக்கும் கப்பல்கள் தனியார் பாதுகாப்புச் சேவைகளின் ஆயுதமேந்திய பாதுகாவலர்களை பணியில் அமர்த்தி அப்பிரதேசத்தை ஊடறுத்துப் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தன.
பாதுகாப்பு பணி
இலங்கையின் தனியார் நிறுவனமான அவண்ட் கார்ட் நிறுவனம் அதற்கான பாதுகாப்பு பணிகளை வழங்கி வந்த நிறுவனங்களில் ஒன்றாகும்.
கடந்த 2023ம் ஆண்டு செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பிரதேசங்கள் அச்சுறுத்தல் மிக்க இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள போதும், வர்த்தகப் கப்பல்கள் அப்பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் போது தனியார் பாதுகாப்புச் சேவை ஊழியர்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளும் வழக்கம் தொடர்கின்றது,.
இந்நிலையில் குறித்த பாதுகாப்புப் பணிகளில் அவண்ட் கார்ட் நிறுவனத்துக்குப் பதிலாக இலங்கைக் கடற்படையினரை ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக அதற்கான பணிகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
