வடமத்திய மாகாண ஆளுநரின் விவசாய பண்ணையை தாக்கி, இரசாயன பசளைகளை சூறையாடிய மக்கள்
வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்திற்கு சொந்தமான விவசாய பண்ணையில் உள்ள களஞ்சியத்தை மக்கள் தீயிட்டு கொளுத்தி, இரசாயன பசளைகளை சூறையாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹிபால ஹேரத்திற்கு சொந்தமான திம்புலாகல பந்தனாகல பகுதியில் அமைந்துள்ள 50 ஏக்கருடன் கூடிய விவசாய பண்ணையின் களஞ்சியத்தில் இருந்த சுமார் 400 யூரியா பசளை மூட்டைகள் மற்றும் ஒரு தொகை இரசாயன உரங்களும் இருந்துள்ளன. அவற்றை விவசாயிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆத்திரமடைந்த மக்கள் விவசாய பண்ணைக்குள் புகுந்து, அங்கிருந்த சொத்துக்களுக்கு தீயிட்டுள்ளனர். இதன் பின்னர், களஞ்சியத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பசளை தொகையை கண்டுபிடித்துள்ளனர்.
விவசாய பண்ணையின் களஞ்சியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில உழவு இயந்திரங்களும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் களஞ்சியத்தில் இருந்த பெருந்தொகையான மூட்டைகளும் தீயில் எரிந்துள்ளதாக விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு இரசாயனம் மற்றும் யூரியா பசளைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் வடமத்திய மாகாண ஆளுநருக்கு சொந்தமான விவாசாய பண்ணையில் பெருந்தொகையான இரசாயன பசளைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை ஆச்சரியத்திற்குரியது என விவசாயிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் பொலிஸாரையும் விரட்டியத்துள்ளனர்.
இதன் காரணமாக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சென்றிருந்த சிறிபுர பொலிஸ் நிலையத்தின் பொலிஸாரும் திரும்பிச் சென்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மஹிபால ஹேரத், முன்னாள் அமைச்சர் கனக ஹேரத்தின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.