நாட்டில் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை!: தேசப்பிரிய கருத்து
அரசியல் கட்சிகளில் அடிப்படை ஜனநாயக முறைமை இல்லாமையே இளைஞர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காமைக்கு காரணம் என தேர்தல்கள் ஆணையகத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கட்சிகளுக்குள் தலைவர்களுக்கு எல்லையற்ற அதிகாரங்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “60 வயதில் அரச ஊழியர்கள் ஓய்வு பெற வேண்டுமென்றால் அரசியல்வாதிகள் ஏன் 60 வயதில் ஓய்வு பெறக்கூடாது என்ற குழப்பம் காணப்படுகின்றது. அது குறித்து யாரும் கேட்பதுமில்லை.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்
நூற்றுக்கு நூறு வீதமான சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட அல்லது நூற்றுக்கு நூறு வீதமான இளைஞர்கள் அடங்கிய நாடாளுமன்றத்தால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
திறமையான இளைஞர்கள் இருக்கின்றார்கள் ஆனால் நாங்கள் சந்தர்ப்பம் வழங்குவதில்லை என கூறுகின்றார்கள். மறுபுறம் வயது கூடியவர்களை நீக்க வேண்டும் என கூறுகின்றார்கள்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
தற்போது இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமைக்கு காரணம் என்ன? கட்சிகளுக்குள் அடிப்படை ஜனநாயகம் இல்லாமையே காரணம்.
கட்சி தலைவர்களுக்கு எல்லையற்ற அதிகாரங்கள் காணப்படுகின்றன. முதலாவது அதனை மாற்ற வேண்டும்.
அதனை மாற்றும் வரையில் இளைஞர்களின், பெண்களின், தமிழ் முஸ்லிம் மக்களின் அல்லது மலையக மக்களின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீ்ர்வு காண முடியாது” என தெரிவித்துள்ளார்.