மக்களின் வரிப்பணத்தை ஆடம்பரமாக செலவு செய்த ராஜபக்ஷர்கள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு பயணங்களுக்காக பெருந்தொகை பணத்தை செலவிட்டுள்ளதாக தகவலறியும் சட்டம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்மைகய கடந்த வருடம் 5 வெளிநாட்டு விஜயங்களுக்கு 44 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2021ஆம் ஆண்டு 2 வெளிநாட்டு விஜயங்களுக்கு 36 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 3 வெளிநாட்டு விஜயங்களுக்கு சுமார் 7 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார். முன்னாள் பிரதமரின் உத்தியோகப்பூர்வ விஜயங்களுக்கான செலவு மொத்த செலவில் 83 சதவீதமாகும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.
அவரது சகோதரரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் மற்றும் இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி - 20 சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 2021 செப்டெம்பர் 10 ஆம் திகதியன்று அவர் இத்தாலிக்கு மேற்கொண்ட பயணத்தின்போது 26,401,901 ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலரும் கலந்துக் கொண்டனர்.
முன்னாள் பிரதமர் மற்றும் அவரது பிரதிநிதிகள் இத்தாலியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் உணவருந்தும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், அது அப்போதைய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள்
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் ஒப்பிடும் போது, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்களில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனிப்பட்ட நண்பர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றமையே, பெருமளவு செலவு ஏற்படக் காரணம் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், முன்னாள் பிரதமர் மஹிந்த
ராஜபக்சவின் செயலாளர் காமினி செனரத், முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஜயநாத்
கொலம்பகே ஆகியோர் பிரதமர் மஹிந்த மற்றும் அவரது மனைவி, மகனுடன் இத்தாலியில்
உணவருந்துவதைக் காட்டும் புகைப்படமொன்றை தி கார்டியன் இணையத்தளம்
வெளியிட்டிருந்தது.
நடைமுறையின்படி பிரதமர் வெளிநாட்டில் இருக்கும் போது, அவரது செயலாளர் நாட்டில் இருக்க வேண்டும். இது வெளியுறவு அமைச்சருக்கும் வெளியுறவுத்துறை செயலாளருக்கும் பொருந்தும்.
எனினும், இத்தாலி பயணத்தின் போது காமினி செனரத் பிரதமருடன் சென்றிருந்த
அதேவேளை ஜயநாத் கொலம்பகேயும் வெளிவிவகார அமைச்சருடன் சென்றிருந்தார்.
எனினும், இரண்டு செயலாளர்களும் ஏன் இத்தாலிக்குச் சென்றனர் என்பது குறித்து
எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.