மகிந்த இந்த நாட்டை அழித்த தலைவராக சகல சமூகங்களாலும் பார்க்கப்படுகிறார்: தவராசா கலையரசன் (Photos)
மகிந்த ராஜபக்ச இந்த நாட்டை அழித்த தலைவராகச் சகல சமூகங்களாலும் பார்க்கப்படுவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப்பிரார்த்தனை சபையின் முதலாவது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இந்த நாட்டிலே மிக நீண்டகாலமாக வாழ்கின்ற எமது இனத்திற்குரிய அந்தஸ்து இதுவரை கிடைக்கவில்லை. ஆலயங்களின் வரலாறுகள் அழிக்கப்படுகின்றன.
இதுவே இங்கு நடைபெற்று கொண்டிருக்கின்றது. பெரும்பான்மை சமூகத்தின் வாக்கில் வெற்றி பெற்றவன் நான் என்ற எண்ணத்துடன் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவருக்கு இன்று நாலா பக்கமும் எதிர்ப்பலைகள் தோன்றியுள்ளன.
இன்று மகிந்த ராஜபக்ச இந்த நாட்டை அழித்த தலைவராகச் சகல சமூகங்களாலும் பார்க்கப்படுகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உரையாற்றுகையில்,
இன்று பிள்ளைகள் பல்வேறு சமூக சீர்கேடான சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சந்தர்ப்பத்தில் இதுபோன்ற கூட்டுப்பிரார்த்தனை சபைகளின் இறைசேவை அளப்பரியது. இதன் மூலம் சமூகத்தை ஒழுக்கமுள்ள சமூகமாக மாற்ற முடியும்.
பெற்றோர்கள் பிள்ளைகளைச் சரியான வழியில் கொண்டு செல்லவும் இச்சபை உதவுகின்றது.
ஆகவே இச்சபையினை வழிநடத்த தன்னால் முடிந்த உதவிகள் பெற்றுக்கொடுக்கப்படும்.
இதேநேரம் கடந்த தேர்தலில் திட்டமிடப்பட்டுத் தேர்தல் களத்தில் சில நபர்கள் இறக்கப்பட்டனர். அதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டது.
ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அம்பாறை மாவட்ட மக்கள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தேசிய பட்டியல் உறுப்புரிமையை வழங்கி மாவட்ட மக்களைக் காப்பாற்றியது. அதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நன்றி சொல்கின்றேன்.
ஆனாலும் இந்த வரலாற்றுத் தவற்றை மக்கள் எதிர்காலத்தில்
விடாமல் ஒன்றாகப் பயணித்து தமிழர்கள் உரிமையைப் பாதுகாப்பது இங்கு வாழும் மக்களின்
கடமை என குறிப்பிட்டுள்ளார்.