மஹரகம நகரசபையில் இடம்பெற்ற மோதல் - வெளியான காணொளி
மஹரகம நகரசபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாதாந்த அமர்வின்போது அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.
உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் நிலை காரணமாகவே அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மஹரகம நகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்களான சாவித்ரி குணசேகர மற்றும் நிஷாந்த விமலசந்திர ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நகரசபையின் உறுப்பினர்களுக்கான அறையொன்றில் இடம்பெற்ற வாக்குவாதத்தை, ஆளும் தரப்பின் உறுப்பினரான சாவித்ரி குணசேகர அண்மையில் ஒளிப்பதிவு செய்திருந்தார். அவர் குறித்த காணொளியை சமூகவலைத்தளம் ஒன்றில் பதிவேற்றியிருந்தார்.
இது தொடர்பில் நேற்றைய மாதாந்த அமர்வின்போது, சக உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
இதன்போது, ஆளும் தரப்பு உறுப்பினரான நிஷாந்த விமலசந்திர, இக்காணொளியை பதிவேற்றிய உறுப்பினரின் அருகில்சென்று எதிர்ப்பு தெரிவித்தபோது, அது கைகலப்பாக மாறியுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த நிலையில் இந்த சம்பவமானது மக்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.