விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இந்திய வான் பரப்பில் பதற்றம்
ஈரானில் இருந்து சீனாவுக்கு பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலால் இந்திய வான்பரப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானத்தை பாதுகாக்கவும், ஜெய்ப்பூர் அல்லது சண்டிகர் விமான நிலையத்தில் தரையிறங்க தேவையான வசதிகளை செய்யவும் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் தெஹ்ரானில் இருந்து சீனாவில் உள்ள குவாங்சூ வரை சென்ற ஈரான் நாட்டின் தனியார் நிறுவன விமானம், இந்திய வான் வழி பரப்பில் பயணித்த போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது உடனடியாக விமானி டெல்லி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கோரிய போதிலும், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பின்தொடர்ந்து சென்ற இந்திய விமான படை
அத்துடன், ஜெய்ப்பூர் உள்ளிட்ட வேறு சில விமான நிலையங்களை பரிந்துரை செய்துள்ளனர். டெல்லி விமான நிலையத்தை ஈரான் நாட்டின் விமான நிறுவனத்தின் விமானி தொடர்பு கொண்ட உடன் இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானங்கள் தயார் படுத்தப்பட்டு, முழுமையான கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டது.
தனியார் நிறுவன விமானத்தை தொடர்ந்து வான்வெளியில் பயணித்தபடி இந்திய விமானப்படை போர் விமானங்கள் பின்தொடர்ந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இந்திய விமானப்படை முழு விளக்கம் அளித்துள்ளது. ஈரான் நாட்டின் பதிவு செய்யப்பட்ட விமானம் இந்திய வான்வழிப் பகுதியில் நுழைந்த பொழுது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதையடுத்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் பாதுகாப்பான தொலைவில் அந்த விமானத்தை பின் தொடர்ந்தது.
வெடிகுண்டு மிரட்டலை புறக்கணிக்குமாறு தகவல்
மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானம் ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில விமான நிலையங்களில் தரையிறங்க பரிந்துரை வழங்கப்பட்டது. ஆனால் அவற்றை ஏற்க மறுத்த விமானி தொடர்ந்து விமானத்தை தனது பயண பாதையிலேயே செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிது நேரத்திற்கு பிறகு தெஹ்ரானிலிருந்து இந்த வெடிகுண்டு மிரட்டலை புறக்கணிக்குமாறு தகவல் கிடைத்த நிலையில், மேற்கூறிய விவகாரத்தில் மத்திய விமான போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்திய வான்வழிப் பகுதியில் சம்பந்தப்பட்ட விமானம் பயணம் மேற்கொண்ட போது இறுதிவரை முழுமையாக கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டதாகவும், இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.