மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ அரசடி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்(Photos)
கிழக்கிலங்கையின் மிகவும் பழமையான ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ அரசடி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.
கடந்த 06ஆம் திகதி கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று(11.09.2023) கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று(10.09.2023) அடியார்களால் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வும் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை தொடக்கம் மாலை வரையில் நடைபெற்ற இந்த எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
ஆலயம் புனரமைப்பு
குறித்த ஆலயமானது 18 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்காலிக ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கும்பாபிஷேகம் கிரியைகள் யாவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் மற்றும் தாந்தாமலை முருகன் ஆலயங்களின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை புண்ணியாக வாசனம், யாகபூஜை, உபசார ஹோமம், விசேட தீபாராதனை உட்பட பல்வேறு கிரியைகள் நடைபெற்று பிரதான கும்பம் உட்பட கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
அதேவேளை பக்தர்களின் அரோகரா கோசத்துடன் மேளதாள முழங்க கும்பாபிஷேகம் செய்யப்பட்டதை அடுத்து மூலமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து கோபுரபூஜை நடைபெற்றதுடன் பக்தர்களின் தசதர்சன வழிபாடுகள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



















