மடு அன்னையின் திருவிழாவில் பங்கேற்போரிடம் ஆயர் விடுத்துள்ள கோரிக்கை
மடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கு யாத்திரிகர்களாக வருவோர் இங்கு வழிபாடுகள் நடைபெறுகின்ற போது வீடுகளில் அல்லது கூடாரங்களில் இருந்து உங்கள் பொழுதுபோக்களை தவிர்த்து வழிபாடுகளில் கலந்துகொண்டு அன்னையின் ஆசியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாட்களில் விடுமுறை அதிகமாக காணப்படுவதால் அதிகமான மக்கள் இவ்விழாவில் கலந்துகொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களுக்கான கோரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு பணிகளில் ஈடுபடும் அனைத்து திணைக்களங்களின் ஒத்துழைப்புகளுக்கு நன்றி கூறி நிற்கின்றேன். உங்கள் ஒத்துழைப்பு இருக்கும் போதுதான் இவ்வாறான பெரு விழாவை சிறப்பாக கொண்டாட முடியும்.
இந்த ஆடி மாத பெருவிழாவுக்கு தற்பொழுது அதிகமான பக்தர்கள் வந்து விட்டார்கள். கடந்த ஆண்டு எரிபொருள் தட்டுப்பாடு இருந்தமையால் பெரும்பாலான பக்தர்கள் இவ்விழாவுக்கு வருகை தர முடியாத நிலை இருந்தது.
ஆனால் இம்முறை இவ்வாறான பிரச்சினைகள் இல்லாதபடியால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மடு திருப்பலி வளாகத்துக்குள் யாத்திரிகர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள 580 வீடுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் பலர் இப்பொழுது கூடாரங்களை அமைத்து தங்கி இருக்கின்றனர். இன்றைய நிலையை பார்க்கும் போது மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் 29 ஆம் திகதியிலிருந்து 3 ஆம் திகதி வரை விடுமுறை தினங்களாக இருப்பதால் அதிகமான சனத்தொகை இவ்விழாவுக்கு வருகை தருவதாக தெரியவருகின்றது. ஆகவே இவ் திருவிழாவுக்கான ஒழுங்குகளை சரியான முறையில் ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் உண்டு.
திருவிழா திருப்பலி
ஆகவே அரச மற்றும் ஏனையவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து நிற்கின்றோம். இதையிட்டு மாவட்ட அரசாங்க அதிபரின் திட்டங்களுக்கு கீழ் யாவரும் சிறப்பான ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என நினைக்கின்றேன்.
மேலும் மடுத் திருப்பலிக்கு யாத்திரிகர்களாக வருவோர் இங்கு வழிபாடுகள் நடைபெறுகிற போது வீடுகளில் அல்லது கூடாரங்களில் இருந்து உங்கள் பொழுதுபோக்குகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
பெருவிழாவுக்கு முதல் நாள் அதாவது ஆடி மாதம் முதலாம் திகதி மாலை ஆராதனை 6 மணிக்கு செபமாலையுடன் ஆரம்பமாகும். இதன்பின் திவ்விய நற்கருணை ஆராதனையுடன் இதன் பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெறும்.
2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் இதைத் தொடர்ந்து 6.15 மணிக்கு ஆயர்களின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும். இதைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சுரூப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |