வல்வெட்டித் துறையில் இராணுவ முற்றுகையை உடைத்தெறிந்து கண்ணீருடன் மாவீரர்களுக்கு அஞ்சலி
இரண்டாம் இணைப்பு
வல்வெட்டித்துறை தேருவில் ரேவடி கடற்பரைப் பகுதியில் பொது மக்கள் ஒன்று குவிந்து மாவீரர்களுக்கும் இறந்த பொது மக்களுக்கும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர.
ஆயிரக்கணக்கில் ஒன்று குவிந்த மக்கள், கண்ணீருடன் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, பொது மக்களை திடலுக்குள் அனுமதிக்காததால் வெளியில் நின்றும் சுடரேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் இறுதி வரை முயன்று பலனளிக்காத நிலையில், நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு வந்தோரை அச்சுறுத்தும் பாணியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
பல்வேறு அச்சுறுத்தல் தடைகளையும் தாண்டி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே திடலுக்குள் இராணுவத்தால் உள்நுழைய அனுமதிக்கப்பட்ட உறவுகள் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்ததுடன் பொதுச் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது உறவுகளை இழந்தவர்கள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இதனை கண்டு அஞ்சலி செய்ய தீருவில் திடலுக்கு வெளியே ஒன்று கூடி தீபங்களை ஏற்றி பொதுமக்கள் அஞ்சலித்த பொழுது முறையில் சிவில் உடையில் இருந்த புலனாய்வுப் பிரிவினர் தீபங்களை தட்டி விட்டதுடன் அநாகரிகமான முறையில் செயற்பட்டனர்.
இந்த அஞ்சலி நிகழ்வில் பங்குபற்றியவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொது மக்கள் திரண்டுள்ள நிலையில், இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றும் முகமாக தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் சிவாஜிலிங்கம், வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் இவ்வாறு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியை நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்நிலையில், அந்தப் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இராணுவ வாகனங்களும் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் ஒன்று குவிந்துவரும் நிலையில், அப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

















