அமைச்சர்களின் சொகுசு வீடுகள் பக்கம் திரும்பும் அரசாங்கத்தின் கவனம்!
நாட்டிலுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களின் சொகுசு வீடுகளை தூதரகங்களுக்கு வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை ஆராய்ந்த குழு, அமைச்சர்களின் குடியிருப்புகளை பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது.
அறிக்கை
அந்த குழுவின் அறிக்கை சமீபத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு நிறுவனங்கள், அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வாடகைக்கு விடுமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இவற்றில் தூதரகங்கள், பல்வேறு அமைச்சுகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடங்கும் என்று அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.
சொகுசு வீடுகள்
மாணவர் விடுதிகளை நடத்துவதற்கு சொகுசு வீடுகளை வழங்குமாறு பல்கலைக்கழகங்களும் தமக்கு அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குமாறு சில நீதிபதிகளும் கோரியுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை கொழும்பில் முப்பத்தைந்து அமைச்சர்களின் சொகுசு வீடுகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைய அரசாங்க அமைச்சர்கள், அமைச்சர் வீடுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.