விடுதலைப் புலிகளின் தலைவரை உயிருடன் கொண்டு செல்ல முற்பட்ட மேற்குலகம்! பகைத்துக் கொண்ட மகிந்த
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல மேற்குலக நாடுகள் முற்பட்டன. அதற்கு மகிந்த இடமளிக்கவில்லை. மேற்குலகைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிப்பதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கினார் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். போர் முடிவடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வந்தனர்.
போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த
அமெரிக்காவில் இருந்தும் குழுவொன்று வந்தது. போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவிடம் அவர்கள் வலியுறுத்தினர். ஏனெனில் பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல முயற்சித்தனர். அவர்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்காமல் மகிந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

1987 வடமராட்சி சமரின்போது இந்தியா பருப்புப் போட்டவேளை(அந்த காலத்தில், அத்தியாவசியப் பொருட்களை விமானத்தின் வழியாக மக்களுக்கு வழங்கினர். இதில் பருப்பு அதிகமாக வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது), ஜே.ஆர். ஜயவர்தன போரை நிறுத்தினார். அன்று போரை நிறுத்தி இருக்காவிட்டால் 4, 5 நாட்களில் போர் முடிந்திருக்கும். வெளிநாடுகளுக்குப் பணிந்து அன்று போரை நிறுத்தினர்.
மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை. மேற்குலகைப் பகைத்துக்கொண்டு போரை முடிக்க அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார்.
அதனால்தான் மகிந்தவுடன் மேற்குலகம் பகையாக உள்ளது. தமிழ்ப் பிரிவினைவாத டயஸ்போராக்களும் அவர்மீது பகை வைத்துள்ளனர். இதனால் மகிந்தவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri