புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த செலவில் ஜீப் வண்டிகள்
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த செலவில் ஜீப் வண்டிகளை இறக்குமதி செய்து வழங்க நிதியமைச்சு தயாராகி வருகிறது.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் வழங்கப்பட்டுள்ள துறைசார்ந்த அபிவிருத்தி பணிகளை காண்காணிக்க வசதியாக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் ஜீப் வண்டிகளை வழங்குமாறு நிதியமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ச, திறைசேரியின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுங்க வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனுமதிப்பத்திரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.
அதேவேளை நிதி ஸ்திரத்தன்மை பாதுகாப்பதற்காக வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் கமத்தொழில், நீர்பாசனம், காணி, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு துறைகளுக்காக குறைந்தளவிலான வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
50 அம்பியூலன்ஸ் வண்டிகள், 50 தண்ணீர் கொள்கலன்கள், 50 பபல் கெப் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. அதேவேளை பணத்தை செலுத்தும் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, அந்நிய செலாவணி பிரச்சினைகளை குறைக்க முடியும் என நிதியமைச்சு கருதுகிறது.
இந்த வாகனங்களை இலங்கை பிரதான வாகன இறக்குமதி நிறுவனத்தின் ஊடாக இறக்குமதி செய்து கொள்வனவு செய்ய நிதியமைச்சு அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளது.