நீண்ட தூர பஸ் சாரதிகளால் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து: பரிசோதனையில் வெளியான தகவல்கள்...
தேசிய மருத்துவ நிறுவனத்தின் நடமாடும் ஆய்வகத்தில் நடத்திய பரிசோதனைகளில் சாரதிகளின் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
தேசிய மருத்துவ நிறுவனத்தின் நடமாடும் ஆய்வகத்தில் கொழும்பு போக்குவரத்து அதிகாரிகள் நேற்று ( 21.01.2026) நீண்ட தூர மற்றும் குறுகிய தூர பஸ் சாரதிகளை பரிசோதனை செய்ததில் 10 பஸ் சாரதிகள் போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி செய்யப்பட்டது.
போதை பாவனையால் பணிகளுக்கு ஏற்படும் ஆபத்து
கொழும்பு பஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பரிசோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது 59 நீண்ட தூர மற்றும் குறுகிய தூர பஸ் சாரதிகள் நடமாடும் ஆய்வகத்தில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.மேலும் பரிசோதனையின் பின்னர், 10 சாரதிகள் போதைப்பொருள் பாவித்து பஸ்ஸை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெலிமடையிலிருந்து கொழும்புக்கு வந்த பஸ் சாரதி ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்படுத்தியதும், அம்பாறையிலிருந்து கொழும்புக்கு வந்த பஸ் சாரதி ஐஸ் பயன்படுத்தியமை மற்றும் 8 சாரதிகள் கஞ்சா பாவித்தமையும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சாரதிகள் நகர போக்குவரத்துப் பிரிவில் முன்னிலைப்படுத்தப்பட்டு, மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.