பாலஸ்தீன ஆதரவு அமைப்பின் மீது விதித்த தடை செல்லாது! லண்டன் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரித்தானியாவில் “பாலஸ்தீன எக்சன்” என்ற அமைப்பை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்த உள்துறை அமைச்சகத்தின் முடிவு சட்டவிரோதமானது என லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுதாவது,
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய உள்துறைச் செயலரால் விதிக்கப்பட்ட இந்தத் தடையானது, கருத்துச் சுதந்திரம் மற்றும் போராடும் உரிமையில் "மிகக் கடுமையான தலையீடு" என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்த அமைப்பு தனது நோக்கங்களுக்காக சில சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டாலும், ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான மிக உயர்ந்த தகுதிகளை அது எட்டவில்லை என்றும் நீதிபதிகள் தங்களது 46 பக்கத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இது அரசாங்கத்திற்குப் பின்னடைவாகக் கருதப்பட்டாலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தற்போதைய உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு அமைப்பிற்குச் சாதகமாக வந்திருந்தாலும், மேல்முறையீடு மற்றும் கூடுதல் சட்ட விவாதங்களுக்காக இந்தத் தடை தற்காலிகமாக நீடிக்கும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இதனால், தற்போதைக்கு அந்த அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதோ அல்லது அதன் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ குற்றமாகவே கருதப்படும்.
பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
இந்தத் தடை நடைமுறைக்கு வந்ததிலிருந்து இதுவரை சுமார் 2,700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக "நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன் - பாலஸ்தீன எக்ஷனை ஆதரிக்கிறேன்" என்ற பதாகைகளை ஏந்தியதற்காகப் பலர் கைதான நிலையில், இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
எனினும், சட்ட நடைமுறைகள் முழுமையாக முடியும் வரை இந்த அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்களைக் கைது செய்யப்போவதில்லை என்று லண்டன் மாநகர பொலிஸார் அறிவித்துள்ளனர்.