நிராகரிக்கப்பட்ட சில வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் நிராகரிக்கப்பட்ட சில வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அதன் பிரகாரம் பிறப்புச் சான்றிதழ், சமாதான நீதவான் உறுதிப்படுத்தல் மற்றும் அரசியலமைப்பின் 07வது உபசரத்தின் பிரகாரம் சத்தியப்பிரமாணத்தில் ஏற்பட்டுள்ள தவறுகள் என்பன காரணமாக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று குறித்த தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு
அதன் பிரகாரம் நிராகரிக்கப்பட்ட சுமார் 35 வேட்பு மனுக்கள் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் என்பவற்றால் முன்வைக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதியரசர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பொதுஜன எக்சத் பெரமுண, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் என்பவற்றினால் மேற்குறித்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.