ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை..
இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன வன்முறை என்பது எழுமாற்றாக நடந்தேறியதோ, அல்லது தற்செயலான சம்பவங்களினால் நடந்ததேறியதோ அல்லவென்றும், அது இலங்கையின் வரலாற்றில் சிங்கள பௌத்தமத எழுச்சியும், மகாவம்சம் என்ற சிங்களவர்களுடைய புனித நூலின் விருப்புவாதமாகிய "தம்மதீப" கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டு திட்டமிட்ட முறையில் ஈழத் தமிழர்களை படிப்படியாக இலங்கைத் தீவில் அழிக்கின்ற செயல்முறையே என்பதை அழுத்தம் திருத்தமாக மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய “கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை“ என்ற நூல் வரையறை செய்கிறது.
இலங்கைத் தீவின் வரலாற்றில் மொழிவழி தேசிய இனங்கள் இரண்டும் தமக்கான அரசை பதினாறாம் நூற்றாண்டு வரை வைத்திருந்தனர். இலங்கைத்தீவின் மீது இந்திய பேரரசர் அசோகர் பௌத்த மதப் படையெடுப்பை செய்தபோதும், வட-கிழக்கு தமிழர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கவில்லை.
தமிழ் இனப்படுகொலை
பௌத்தத்தை வடக்கிலே வரவேற்று அதனை தெற்கே அனுராதபுர அரசுக்கு செல்வதற்கு வழிவிட்டார்கள். அதன் மூலம் பௌத்தம் சிங்கள தேசத்தில் பரவி நிலைபெற்றது.
அதேபோல பின்னாட்களிலே சேர, சோழர், பாண்டிய, கலிங்கர்கள் படையெடுத்தபோதும் அந்த இந்திய மன்னர்களுக்கு எதிராக ஈழத்தமிழ் மன்னர்கள் வாளேந்தவில்லை. மாறாக அவர்களை வரவேற்று தென்னிலங்கை நோக்கிச் செல்ல வழிகாட்டி அனுப்பினர். இலங்கை வரலாற்றில் தமிழ் மன்னர்கள் யாரும் இந்திய மன்னர்களுடன் போரிட்ட வரலாறு இல்லை.
தென்னிந்திய மன்னர்களுடன் ஈழத்தமிழர்கள் போரிடாமையும், அவர்களுடன் நட்புரிமை பாராட்டியமையும்தான் மகாநாம தேரர் இந்தியர்களை எதிர்ப்பதோடு, இந்தியப் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நட்பு உறவு கொண்ட ஈழத் தமிழர்களையும் சிங்களவர்களுடைய பொது எதிரியாக வகைப்படுத்தினார்.
இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் கருவிகளாக ஈழத் தமிழர்கள் உள்ளார்கள் என்று மகாநாமதேரர் கருதியமையினால் தமிழர்களை இலங்கைத் தீவிலிருந்து அகற்ற வேண்டும் என்ற இலட்சிவாத நோக்கிலேயே மகாவம்சம் என்ற நூலை எழுதினார். தமிழின எதிர்ப்புத்தான் மகாவம்ச நுாலிலே “தம்மதீபக்“ கோட்பாடாக இனக்குரோத மனப்பாங்கோடு எழுதப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவு பௌத்தத்தை பாதுகாப்பதற்காக புத்தபிரானால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு, இலங்கைத்தீவு விஜயனும் அவனுடைய சந்ததிகளுக்கே சொந்தமானது, இலங்கை அரசு சிங்கள பௌத்தர்களுக்கே உரித்தானது என்ற மகாநாமதேரரின் விருப்பு வாதத்தை இலட்சிய வாதமாக மகாவம்ச நுாலினுாடாக சிங்கள மக்களின் மனதிலே பதிய வைத்துவிட்டார்.
இதன் விளைவாகவே சிங்களதேசம் இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தையே ஈழத்தமிழர் மீது திணித்து தமிழ் இனப்படுகொலையை நடாத்துகிறது.
ஈழத்தமிழருடைய இறையாண்மை
சிங்களதேசத்தின் இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தையே ஈழத்தமிழர்கள் எதிர்கொண்டு அழிந்துவருகின்றனர் என்பதையும் இந்த நுால் கோடிட்டுக் காட்டுகிறது.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் இந்துசமுத்திரம் என்பதும், பாக்குநீரணை என்பதும் வெறும் மீன்பிடிக் கடலாகவும், இலங்கைக்கும் இந்தியாவுக்குமான கடல் போக்குவரத்து மற்றும் ஆள், பொருள், கள்ளக்கடத்தல் கடலாகவுமே இன்றுவரை பார்க்கப்படுகிறது. அதனை ஒரு அரசியல் கடலாக தமிழர்கள் ஒருபோதும் பார்க்கவில்லை.
ஏன் தமிழீழ விடுதலைக்காக போராடப் புறப்பட்ட எந்த ஒரு போராட்ட இயக்கங்களும் அதனை அரசியல்க் கடலாக பார்க்கவில்லை, தெரிந்திருக்கவுமில்லை.
அத்தகைய ஒரு கருத்து மண்டலம்தான் ஈழத் தமிழர்கள் மத்தியில் இன்றுவரையும் நிலை பெற்றிருக்கிறது. ஈழத்தமிழரின் இறுதி அரசான யாழ்ப்பாண நல்லுார் இராசதனியின்மீது 1560, 1591, 1619 ஆகிய மூன்று காலகட்டங்களிலும் போர்த்துக்கேயர்களினால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைப் போர்களின்போதும், தென்னிந்திய நிலத்திலிருந்து பாக்குநீரிணை ஊடாக சேதுபதி மன்னர்களும், குஞ்செலி மரக்காயர்களும், மதுரை நாயக்கர்களும், கரையார்படைகளும்(மறவர்படை) ஈழத் தமிழர்களுக்கு கைகொடுக்க படைகளை அனுப்பினார்கள்.

ஆயினும் தொடர்ந்து யாழ்ப்பாண இராச்சியத்திற்கு படை உதவி வழங்கல்களை செய்வதற்கு போர்த்துக்கீச கடற்படை பாக்குநீரிணையில் தரித்து நின்று தென்னிந்திய தொடர்பை துண்டித்தமையே நல்லுார் இராச்சியம் வீழ்ச்சியடைந்தமைக்கான பிரதானமான காரணமாகும்.
அவ்வாறே 1619ல் நல்லுார் கைப்பற்றப்பட்ட பின்னரும் போத்துக்கேய ஆட்சியை வீழ்த்தி மீண்டும் நல்லுார் அரசை நிறுவற்காக 1620-1621 காலப்பகுதியில் யாழ்ப்பாண உள்ளூர் தலைவர்கள், வல்வெட்டித்துறை கரையார் தலைவர்கள், மற்றும் தஞ்சாவூர் நாயக்கர் படைகள் இணைந்து யாழ்ப்பாண அரியணைக்கு உள்ளூர் இளவரசரை மீண்டும் அமர்த்த பலமுறை கிளர்ச்சிகளை மேற்கொண்டனர்.
ஆயினும் போர்த்துக்கீச கடற்படை பாக்குநீரிணையில் தரித்து நின்று தென்னிந்திய கடல்வழி வழங்கல்களை துண்டித்தமையே நல்லுார் இராச்சியத்தை மீள்நிறுவ முடியாமைக்கான காரணமாகும்.
ஆகவே தமிழர்களுடைய இறைமை தோற்கடிக்கப்பட்டது தரையில் அல்ல கடலிலேதான். ஈழத்தமிழருடைய இறையாண்மை பாக்கு நீரிணையின் அடியாளத்திலேயே வீழ்த்தப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது.
எங்கு ஈழத்தமிழனுடைய இறையாண்மை புதைக்கப்பட்டுள்ளதோ, எங்கு வீழ்த்தப்பட்டதோ அந்த பாக்குநீரிணை அரசியலில் இருந்துதான் ஈழத்தமிழரின் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாய் ஜனநாயக அரசியலில் தொடர்ந்து தோல்வி அடைவதற்கான காரண காரியங்களை தெரிந்து கொள்ளாமல் வரலாற்றை வெற்றிகரமான பாதையில் ஒருபோதும் இட்டுச் செல்ல முடியாது.
முள்ளிவாய்க்கால் மண்
" வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது" ("History is written by the victors") என்பதற்கிணங்க தொடர் தோல்விகளில் இருந்து விடுபட்டு வெற்றியடைவதற்கான பாதையை ஈழத் தமிழினம் உடனடியாக கண்டறிய வேண்டிய இறுதிக் காலகட்டம் இது.
கடந்த நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாய் கடலின் அடியாளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்தின் இறையான்மையை தரையில் தேடும் அறிவீனமே இன்றுவரையான ஈழத்தமிழினத்தின் அரசியலாய் உள்ளது.
ஈழத் தமிழர்களின் இறையாண்மை வீழ்ச்சியையும், விடுதலைப் போராட்ட தோல்வியையும் கடலிற்தான் தேடவேண்டும் என்றும், இலங்கைத்தீவை ஆக்கிரமித்து, ஆளவந்த அந்நியர்களும், தற்போது ஆண்டு கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் தமிழ் மக்களுடைய உரிமைகளை கடலிலே புதைத்து விட்டார்கள் என இந்நுால் கூறுகிறது.

புவியியல் எதார்த்தத்தில் காணப்படும் கடல்சார் அரசியலின் ஆணிவேரிலிருந்து முற்றிலும் அறிவார்ந்த வகையில் ஈழத் தமிழரின் கடந்தகால தோல்விகளுக்கான அடிச்சுவடுகளையும், எதிர்கால வெற்றிகளுக்கு தகுந்த வழிவரை படத்தையும் இந்நுாலில் வரையப்பட்டுள்ளது.
இந்நூலாசிரியரின் கடந்த 40 ஆண்டு கால எழுத்துக்கள் அனைத்திலும் இந்த கடல் சார்ந்த அரசியல் நீரோட்டம் அப்படியே தெளிவாய் தொடர்ந்து ஓடுகிறது. கடலிலே புதைக்கப்பட்ட தமிழர்களுடைய இறையாண்மையையும், சுதந்திரத்தையும், இனவிடுதலையையும் குறிப்பாக பாக்குநீரிணைக் கடலிலேதான் தேடவேண்டும் என்கிறாது இந்நுால்.
அறிஞர்களுடைய நூல்களில் எழுதப்பட்ட வரிகளைவிட அந்த எழுதப்பட்ட வரிகளுக்கிடையே தெறித்துக்கொண்டு தொக்குநிற்கும் எழுதப்படாத வரிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பர்.
அவ்வாறே இந்நுாலும் எழுதப்பட்டவைகளுக்கு இடையே தொக்குநிற்கும் எழுதப்படாத வரிகள் ஆய்வு கலையின் மிகமுக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் பிரயோகம். ஈழத்தமிழர்கள் பாக்குநீரிணையில் இழந்துபோன இறைமையை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை தெரிந்தோ, தெரியாமலோ பாக்கு நீரிணை ஊடாகவே ஆரம்பித்தனர்.
ஆயினும் ஈழத் தமிழர்கள் பாக்குநீரிணையின் முக்கியத்துவத்தை தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்ற துயரகரமான உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
அந்தப் புரிதல் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படாததன் விளைவுதான் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தது. ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தது என்பது முள்ளிவாய்க்கால் மண்ணிலல்ல.
போராட்டம் தோல்வி அடைந்தது முதலாவது பாக்கு நீரிணையில், இறுதியாக தோல்வியடைந்தது இந்து சமுத்திரத்தில். ஆக மொத்தத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்தது தரையிலல்ல அது கடலில்த்தான்.
இந்த தத்துவார்த்த உண்மை புரியாத வரைக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியாது என இந்நுால் கூறுகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பின்தளமாக ஆரம்ப காலத்தில் தமிழகமே இருந்து வந்தது. தமிழகத்தின் பிந்தளத்தை ஈழத்தமிழர்கள் இழந்த பின்னரும் பாக்குநீரிணையின் முக்கியத்துவம் கருத்திற் கொள்ளப்படவில்லை.
மாறாக இந்து சமுத்திரம் எங்கள் கையில் உள்ளது என்று ஈழத் தமிழர்கள் நம்பினர். ஆயினும் மாறிவரும் உலக அரசியல் ஒழுங்கில் இந்துசமுத்திரத்தில் ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை 2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கையிலிருந்து 2006 வரையான நான்கு ஆண்டுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆயுத வழங்களைச் செய்த விடுதலைப் போராட்டத்திற்கு சொந்தமான 9 கப்பல்கள் இந்து சமுத்திரத்திலே தாக்கி அழிக்கப்பட்டன. அவற்றில் மூன்று கப்பல்களைத் தவிர ஏனைய கப்பல்கள் உலகின் பலம் வாய்ந்த நாடுகளின் தாக்குதல்களினாலேயே அழிக்கப்பட்டன.
ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு
மூன்று கப்பல்கள் மாத்திரமே இலங்கை கடற்படையால் அழிக்கப்பட்டது என்ற உண்மையை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழிழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்பது கடலிலே என்றால் நாம் அந்த கடலை எவ்வாறு கையாள வேண்டும்? என்பதைப் பற்றி நாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.
விடுதலைப் போராட்டம் இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதைக்கப்பட்டுவிட்டது என்றால் அங்கிருந்துதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். ஆகவே ஈழத் தமிழர்கள் கடலை கையாள கற்றுக்கொள்ளவில்லை என்றால், வெற்றிக்கான பாதையை நாம் கண்டறியவில்லை என்பதே அர்த்தமாகும்.

ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு பாக்குநீரிணையும், இந்துசமுத்திர அரசியலும் அச்சாணியாக உள்ளது என்பதனால் அந்த பார்க்குநீரிணையையும், இந்துசமுத்துவத்தையும் இணைத்த ஒருங்கிணைந்த கடல்சார் அரசியலை தமிழ் மக்கள் முன்னெடுப்பதுதான் விடுதலைக்கான ஒரேவழி. “கடலை நம்மால் கையாளமுடியவில்லை என்றால் ஈழத் தமிழர்களுக்கு இலங்கை தீவில் எதுவும் மிஞ்சாது“ என்ற எழுதப்படாத அந்த தொக்குநிற்கும் வரிகளை அடிநாதமாக கொண்டிதிருப்பதுதான் இந்நூலின் விசேட பண்பாகும்.
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்ட ரீதியில் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக தத்துவார்த்த ரீதியில், வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்த அத்தனை விடயங்களையும் உள்ளடக்கி இந்நுாலில் பதிவுசெய்கிறது. மாக்ஸியத்தை புரிந்துகொள்வதற்கு மாக்ஸ்சை பற்றி புரிந்து கொள்ளவேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
அதேபோல இந்த நூலை புரிந்து கொள்வதற்கு மு.திருநாவுக்கரசு அவர்களின் ஈழப் போராட்டம் சார்ந்த அவரின் வகிபாகமும், அவருடைய ஈழப் போராட்டம் சார்ந்த தரிசனங்களை தத்துவார்த்த ரீதியிலும், வரலாற்று ரீதியிலும், தீர்க்க தரிசனத்தோடு அவர் எழுதிய 20க்கு மேற்பட்ட நூல்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமானது.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சார்ந்தும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு சார்ந்தும் தீர்க்கமான முடிவுகளை சொல்லவல்ல இந்நுாலாசிரியர் ஈழப் போராட்டம் காலத்திற்குகாலம் சந்தித்த பல்வேறு நெருக்கடிகளுக்கு அக்காலகட்டத்திலேயே அவற்றிற்கான தீர்வுகளை மிகத்தீர்க்கமாக முன்வைத்ததில் முதன்மையானவர்.
மத்திய கிழக்கின் யுத்தம்
ஈழத்தமிழ் மக்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் போராட்டம் நெருக்கடிகளை சந்தித்த காலங்களில் எல்லாம் நெருக்கடிகளை தீர்க்கவல்ல அறிவியல் சார்ந்தும், தத்துவார்த்தம் சார்ந்தும் தனது முடிவுகளை அவரது நூல்களின் மூலமாக வெளிப்படுத்தியவர். இலங்கையின் இனப்பிரச்சினை சார்ந்து அறிய வேண்டுமானால், ஆய்வு செய்ய வேண்டுமானால் திருநாவுக்கரசை கடந்து அல்லது அவரை தவிர்த்து, அவர்களுடைய நூல்களை வாசித்தறியாமல் ஈழப் பிரச்சனை பற்றி முழுமையாக ஆய்வு செய்திட முடியாது.
அத்தகைவரால் எழுதப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்ற இந்நூலினுாடாக ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு வழிமுறையை அழுத்தம் திருத்தமாக தமிழ்ச் சமூகத்திடம் கையளித்துள்ளார்.
இதனை குத்தச்சாக் கொண்டே ஈழத் தமிழரின் விடிவுக்கான அரசியல் ஒளிவட்டத்தை தரிசிக்க வேண்டும் என்பதில் அணு அளவும் சந்தேகமில்லை. இற்றைக்கு 2400 வருடங்களுக்கு முன்னர் கிரேக்கத்தில் பிளேட்டோ எழுதிய குடியரசு நூல் உலகளாவிய கண்ணோட்டத்தில் பிரபஞ்சம் தழுவிய ரீதியில் மனிதன் பற்றிய பார்வையை மிகத் தெளிவாகச் சொல்கிறது. தொடர்ந்து காலத்துக்கு காலம் பல்வேறு நூல்கள் உலகம், பிரபஞ்சம், மனிதன் பற்றியய நோக்கில் எழுந்திருக்கின்றன.

அந்த அடிப்படையில் இருபதாம் நூற்றாண்டில் ராகுல சங்குத்தியா எழுதிய “வொல்கா முதல் கங்கை வரை“ என்ற நூல் ஒரு முழுநீள மனிதகுல வரலாற்றை சொல்கிறது.
அவ்வாறே அண்மைய காலங்களில் பிரான்சிஸ் புக்குஜாமா(Francis Fukuyama) எழுதிய The Origins of Political Order (2011). இதன் தொடர்ச்சியாக Political Order and Political Decay (2014) ஆகிய இரண்டும் நூல்களிலும் பிரபஞ்சம் தழுவிய மனிதகுல அரசியல் ஆதிக்க வரலாற்று வளர்ச்சியை விரிவாகப் பார்க்கலாம். அத்தகை உலகப்பிரசித்தி பெற்ற நுால்களுக்கு சற்றும் குறைவின்றி காத்திரமான வகிவாகத்தை கொண்டதாக 2015ல் மு.திருநாவுக்குக்கரசு எழுதிய “பூகோள வாதமும் புதியதேசியவாதமும்“ என்ற நூல் அமைகிறது.
இலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் போராட்ட நோக்கு நிலையில் இருந்துகொண்டு, உலகம் தழுவிய பார்வையில் அண்டப் பிரபஞ்ச உணர்வோடும், மனித குலவரலாற்றுப் படிமங்களோடும், வரலாற்றையும், தத்துவங்களையும், கோட்பாடுகளையும், மனித குலத்தின் வெற்றிகளையும், தோல்விகளையும், உயர்வுகளையும், தாழ்வுகளையும், சீரழிவுகளையும், நீதி நியாயங்களையும் மனிதகுலம் கடந்து வந்த பாதையில் அதன் எழுச்சிகளை, வீழ்ச்சிகளை, நல்லவைகள், கெட்டவைகள் அனைத்தையும் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான பாதைக்கு வழிசமைக்கும் நோக்கில் உலகம் தழுவிய பார்வையில் மனிதகுல வரலாற்றையும் அந்த வரலாற்றுக்குள் அடங்குகின்ற ஈழத் தமிழர் போராட்டத்தையும் ரத்தமும் சதையுமாக நடைமுறை சார்ந்து ஈழப் போராட்டத்தின் நோக்கு நிலையில் இருந்து கொண்டு தமிழ் மக்களிடம் “புதிய தேசியவாத“ என்ற கருத்தியலை துணிந்து முன் வைத்துள்ளார்.
இந்நூல் ஈழத் தமிழர்களுடைய அறிவியல் வளர்ச்சியின் முதிர்ச்சிக்கு சான்றாகவும் அமைந்துள்ளது.
அதேபோன்று “ஒற்றைமைய உலகில் போரும் சமாதானமும்“ என்ற நூல் கடந்த ஒரு நூற்றாண்டு கால தத்துவம், அரசியல், பொருளாதாரம், யுத்தம் என்பவற்றை முற்றிலும் தத்துவார்த்த கண்ணோட்டத்தில் நடைமுறை சார்ந்த ரீதியில் “மத்திய கிழக்கில் மேற்குலகின் அழித்தொழிப்பு யுத்தம்“ என துணிந்து தன் கருத்துக்களை தீர்க்கதரிசனத்தோடு முன்வைத்திருக்கிறார். குறிப்பாக இன்றைய மத்திய கிழக்கின் யுத்தத்தை 20 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த நூலில் நுண்மான் நுழைபுலனோடு முன்வைத்திருக்கிறார்.
விருப்பு வெறுப்புகளை கடந்து மார்க்சிசத்தையும் கம்யூனிசியத்தையும் சரிவர எடை போடுவதோடு அவற்றிடையே உள்ள குறைபாடுகளை துணிந்து சொல்கிறது. கால் மார்க்ஸ் இந்த பிரபஞ்சத்தின் தன்னிகரற்ற தத்துவ ஞானிதான் ஆயினும் அவருடைய தத்துவத்தில் உள்ள சரி-பிழைகளை, குறைபாடுகளை நடைமுறை சார்ந்து முன்வைக்கிறது.
இத்தகைய மிக காத்திரமான அந்த நூல் பலராலும் வாசிக்கப்பட்டாலும் அது பற்றி பொதுவெளியில் பெரியளவில் பேசப்படாமல் உள்ளது என்பது ஈழத் தமிழர் சார்ந்த அறிவியலின் துரதிஷ்டமான பக்கங்களே. ஆயினும் அந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் அதன் கனதியும் காத்திரமும் அதிகரிக்கும் என நம்பலாம்.
இந்துமாகடலின் அடி ஆழம்
இத்தகைய ஒர் அறிய நூலை எழுதியவர்தான் தற்போது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்ற இந்நூலை எழுதுகின்ற போது அதற்கான பார்வையும், பரிமாணமும், தனித்துவமும், கனதியும் கனகாத்திரமாக இருக்கும் என நம்பலாம். "ஒரு சமூகத்தின் அறிவியல் கொள்ளளவு என்னவோ அதற்குள் இருந்துதான் அச்சமுகத்தினுடைய சமூக பிரதிநிதிகளும், தலைவர்களும் தோன்றுவர்.
ஒரு சமூகத்தின் அறிவியல் மட்டம் என்னவோ அந்த மட்டத்துக்கு உட்பட்டுதான் அச்சமுகத்தினுடைய அறிஞர்களும், ஞானிகளும், தீர்க்கதரிசிகளும் தோன்றுவர். விதிவிலக்காக தமிழினத்திலும் இந்நுாலாசிரியர் போன்று ஓரிருவர் அந்த கொள்ளளவை தாண்டியும், விஞ்சியும் தோன்றியிருக்கிறார்கள். ஆயினும் அறிவியல் மடடத்தை விஞ்சித் தோன்றுவது என்பதும் அரிதினும் அரிதே.
கடந்துபோன இறந்தகாலத்தை போற்றிப் புகழ்ந்து பேசி காலத்தைக் கழிக்கும் ஒரு இனத்திலிருந்து எப்படி முற்போக்கு சிந்தனையை எதிர்பார்க்க முடியும்? எப்படி எதிர்காலத்தைப் பற்றி அவர்களால் சிந்திக்க முடியும்? அறிவியலையும், சிந்தனையையும் கடந்தகாலம் புகழ்ச்சியினால் காயடிக்கும் தமிழ்ச்சமூகம் அறிவியலில் முன்னேறுவது மிகக்கடினமானது.
அறிவியல் வளர்ச்சி எதிர்க்கணிய வளர்ச்சியடைந்து அறிவியலில் வறுமைப்பட்ட தமிழ்ச் சமுகத்தை தலைமைதாங்க எந்த ஒரு அறிவார்ந்த முற்போக்காளனும் முன்வரமாட்டான் என்பது மட்டுமல்ல அதற்கு அந்த சமூகத்தின் முட்டாள் பிரமுவர்களும் அனுமதிக்க மாட்டார்கள்.
அதையும் மீறி தமிழ்ச் சமூகத்தை அறிவியல் மயப்படுத்த முனையும் முற்போக்காளர்களை தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களினால் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிடுவர். இத்தகைய சூழ்நிலையில் ஓடுகாலிகளே தலைமை தாங்க முன்வருவர். அந்த ஓடுகாலிகளுக்கு புகழாரம் சூட்டி புகழ்ந்து பேசுவதற்கு ஆயிரம் முட்டாள்கள் ஒன்று சேர்வர். அந்த முட்டாள் கூட்டம் அறிவியளாலர்கள் மீது கல்லெறிந்து சமூகத்திலிருந்து தூரத்தூரத்திவிடுவர்.

அத்தகைய போக்கைக் கொண்ட ஈழதமிழர்களை தோல்வியடைந்த சமூகமாக உலகம் அடையாளப்படுத்துவதில் தவறில்லைத்தான்.
இன்று ஈழத்தமிழர்களால் பேசப்படக்கூடிய ஆயிரம் பெருமகளுக்கும் புகழ்ச்சிகளுக்கும் அப்பால் நிஜவாழ்வில் எதிரிகளின் காலடிகளில் அடிமைகளாக வீழ்ந்து கிடப்பதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்த தலைவர் என்று கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாய் எவரும் இல்லை என்பதே நடைமுறை உண்மையாகும்.
இந்துமாகடலின் அடி ஆழத்துக்குள் மூழ்கிப் புதைந்துபோன துயரகரமான தோல்விகளிலிருந்து பாடங்களை கற்றக்கொள்ளாமல் ஒருபோதும் தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையை கண்டறிய முடியாது என்பதை இந்த நூல் முற்றிலும் அறிவார்ந்த வகையில் படம்பிடித்துக் காட்டுகிறது.
அளவால் சிறிதாக இருந்தாலும் இந்நூல் முன்வைக்கும் ஆழமான பார்வையையும், கடல்சார் அரசியல் வழிகாட்டலையும் பின்பற்றாமல் ஈழத்தமிழர்களுக்கு விடுதலைக்கான வேறு மார்க்கங்கள் எதுவுமே இல்லை என்பதை திடசித்தத்துடன் கூறிட முடியும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 20 September, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.