பாலினம், சமத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்தி பெண்களுக்கு அதிகாரமளிக்க சட்டமூலம்: ஜனாதிபதி
பாலினம், சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தை உருவாக்குமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘’நாடாளுமன்றத்தில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், அரச மற்றும் தனியார் துறைகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
புதிய சட்டமூலத்தின் ஊடாக தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக் குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம்
இலங்கையின் முதலாவது அரச சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2 வீதமாக இருந்ததாகவும், சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு 91 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தற்போதைய நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.3 வீதம் மட்டுமே காணப்படுகின்றனர்.
இன்று எமது நாடாளுமன்ற பெண்கள் கூட்டமைப்பினால் ஆண், பெண் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைக்கு எதிரான 16 நாள் செயல்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 1931ஆம் ஆண்டில் இந்த நாட்டில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. முதலாவது இலங்கை அரச சபையில் பெண்கள் இருக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பாட்டி அந்தத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
ஆனால் இந்தத் தேர்தலில் ஒரு பெண்ணும் தெரிவாகவில்லை. எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகும்போது, எங்கள் பாட்டனார் ஜே.எச்.மீதெனிய அதிகாரம் காலமானதன் பின்னர் மொலமூரே அம்மையார் தெரிவானார்.
எதிர்க்கட்சியிலும் ஃலொரன்ஸ் சேனாநாயக்க என்ற பெண் ஒருவரே தேர்ந்தெடுக்கப்பட்டார். 51 பேரில் பெண் ஒருவர் இருந்தார்.
சர்வஜன வாக்கெடுப்பு
அதாவது அந்தச் சபையில் 100இற்கு இரண்டு வீதம் அது. சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் அதாவது 91 வருடங்களின் பின்னர் நான் இதனைக் குறிப்பிடுகிறேன்.
இன்று 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதாவது 5.3 வீதமானோரே இருக்கின்றனர்.
நாம் என்ன செய்திருக்கிறோம் என்று கேட்கிறேன். 90 வருடங்களாக இரண்டு வீதத்தை 5 வீதமாக மட்டுமே உயர்த்தியுள்ளோம்.
ஆளும் கட்சியில் இருந்தும், எதிர்க்கட்சியில் இருந்தும் எமக்கு இதனை செய்ய முடியாமல் போனது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எமக்கு இரண்டு வீத பெண் பிரதிநிதித்துவம் இருக்கும்போது ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் அந்த இரண்டு வீதம் இருக்கவில்லை.
இன்றய நிலைமையைப் பாருங்கள். கனடா நாடாளுமன்றத்தைப் பாருங்கள். லோக் சபையைப் பாருங்கள். அவுஸ்திரேலியாவைப் பாருங்கள்.
எனவே, பெண்களின் பிரச்சினைகள் குறித்து நாம் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமக்கு இதில் பொறுப்பு இல்லை என்று கூற முடியாது.
காரணம் நாம் அனைவரும் இந்தப் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளோம். நானும் இருந்தேன்.
அப்படியாயின், 91 வருடங்களாக நாம் என்ன செய்துள்ளோம். இரண்டு வீதத்தை 5.3 வீதமாக உயர்த்தியுள்ளோம்.
குறைந்த பெண் பிரதிநிதிகளே இருக்கின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபையில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. திருத்தம் செய்யப்பட்டு அந்த வாய்ப்பும் இல்லாமல் போனது. இதைத்தான் செய்துள்ளோம்.
சட்டமூலத்திற்கான கொள்கைகள்
எமது சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்கள். நாடாளுமன்றத்தில் 5.3 வீதமான பெண் பிரதிநிதிகளே இருக்கின்றனர்.
இங்குதான் பிரதான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பணிகளை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற பெண்கள் கூட்டமைப்பிற்கு பொறுப்பு கொடுத்தேன்.
விசேடமாக, பாலினம், சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்திற்கான கொள்கைகளை வகுக்குமாறு அறிவுறுத்தினேன்.
அந்தப் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு சட்டமூலத்திற்கு பதிலாக இரண்டு சட்டமூலங்களை சமர்ப்பிப்பதாக அவர்கள் அறிவித்தார்கள்.
இது சிறந்த விடயம். இதற்குத் தேவையான முழுமையான பணிகளை முன்னெடுக்க வேண்டும். சட்டம் மற்றும் கொள்கை மறுசீரமைப்பு மற்றும் பெண்கள் உரிமை, பாலினம், சமத்துவம், ஆகிய விடயங்களுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்காக பாலினம் சமத்துவம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கத் தேவையான பங்களிப்புச் செய்வதற்கு நாடாளுமன்றத்திற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.
அதிகாரத்துடன் கூடிய தேசிய பெண்கள் ஆணைக்குழு என்ற பெயரில் சுயாதீன ஆணைக்குழுவொன்றை பாராளுமன்ற சட்டமூலத்தின் ஊடாக ஸ்தாபிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.