சட்டப் பயங்கரவாதமும் தமிழர் அரசியலும்
இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினையை கூர்மைப்படுத்தியதிலும், பேரழிவிற்கு கொண்டு சென்றதிலும் தமிழ் மக்களை தொடர்ந்து அடக்குவதிலும், தமிழ் மக்கள் தமக்கிடையே உடைந்தும் பிரிந்தும், சீரழிந்து, சின்னாபின்னப்படுவதற்கும் காரணம் இலங்கைத் தீவின் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பைத் தளமாகக் கொண்டேயாகும்.
இந்த அரசியல் அமைப்புக்குள் உள்ள பல பக்கங்கள் சட்டத்தின் ஆட்சியில் சட்டப் பயங்கரவாதத்தை ( Constitution terrorism) தோற்றுவித்துள்ளது. அதனை வளர்த்துச் சென்றிருக்கிறது, அதற்கு அனுசரணையாக இருந்து சாமரம் வீசி இருக்கிறது.
அத்தகைய அரசியல் அமைப்பையே அளவால் சிறிய தேசிய இனங்கள் மீது பிரயோகித்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை இலங்கை அரசு நிகழ்த்தி வருகிறது.
இங்கே யார் தலைவனாக வந்தால் என்ன யார் இலங்கை அரசு இயந்திரத்தை ஓட்டிச் சென்றால் என்ன இலங்கை அரச இயந்திரம் சிறுபான்மை மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை நடத்தியே தீரும். அதுவே இலங்கை அரசியல் போக்காகவும் உள்ளது.
சட்டப் பயங்கரவாதிகள்
இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்பானது சட்டப் பிரமாணங்களுக்கூடாக உள்ளடக்கி இருக்கின்ற திட்டமிட்ட இனப்படுகொலையையும் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிச் செல்லும் சிங்கள தலைவர்களையும் மட்டும்தான் சட்டப் பயங்கரவாதிகள் என்று நாம் கருதி விட முடியாது.
தமிழ அரசியல் பரப்புக்குள்ளும் தமிழ் தேசியம் பேசுகின்ற அரசியல் கட்சிக்குள்ளும் உள்ள சட்டத்தரணிகள் என்கின்ற சட்டப் பயங்கரவாதிகளும் தமிழ் மக்களின் அழிவுக்கு வித்திட்டு பௌத்த சிங்கள சட்டப் பயங்கரவாதிகளுடன் கூட்டு சேர்ந்தும் தொழில்பட்டு தன்னின உண்ணிகளாக உள்ளதையும் வரலாற்றில் காணமுடியும்.
அத்தகைய தமிழ் தேசிய இனத்திற்குள் இருந்த, இருக்கிற சட்டப் பயங்கரவாதிகள் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
இப்போது இலங்கை தீவின் சிங்கள பௌத்த பேரினவாத சட்டப் பயங்கரவாதம் பற்றிய பார்வையை நோக்கலாம்.
சட்டப்பயங்கரவாதம் என்ற சொல்லாடல் தமிழ் அரசியல் பரப்புக்கு புதிதாக தோன்றலாம். அல்லது வியப்புக்கு உள்ளானதாக இருக்கலாம், அல்லது இந்த சட்டப் பயங்கரவாதம் பற்றிய வியாக்கியானப்படுத்துவோர்களின் வியாக்கியானங்கள் போதாமையாக இருக்கலாம்.
அது பற்றி போதிய வியாக்கியானம் தரவல்ல அரசறிவியல் முதிர்ச்சியுள்ள, நுண்மான் நுழைபுலன் மிக்க அறிவியலாளர்கள் இந்தப் பகுதியை தொடாமல் விட்டிருக்கலாம், அல்லது அதனை தவிர்த்து இருக்கலாம்.
ஆனால் இப்போது இந்த சட்டப் பயங்கரவாதம் பற்றி தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது இன்றைய காலத்தின் தேவை.
ஜனநாயகத்திற்கு பதிலாக இனநாயகம்
சட்டப் பயங்கரவாதம் பற்றிய தெளிவு ஏற்பட்டால் மாத்திரமே தற்போது ஏற்பட்டிருக்கின்ற ஊழல் ஒழிப்புவாத, தாராளவாத, இடதுசாரியாக தோற்றமளித்து வலதுசாரியாக தொழிற்படுகின்ற அரசியல் சுனாமியை தமிழ்த் தேசிய இனத்தினால் எதிர்கொள்ள முடியும்.
இலங்கை தீவில் டொனமூர் அரசியலமைப்பு அனைவருக்கும் வாக்குரிமை என்ற ஒரு வரத்தை இலங்கை மக்களுக்கு வழங்கியது. ஏன் ஆசியாவிலேயே முதன் முறையாக அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடும் இலங்கைதான்.
ஆனால் அந்த வாக்குரிமை தலையெண்ணும் ஜனநாயகமாக (Head counting democracy) அமைந்தனால் அது ஜனநாயகத்திற்கு பதிலாக இனநாயகமாகச் செயற்படலாயிற்று.
சட்டரீதியான குடியேற்றவாசிகள்
இலங்கைத் தீவில் தலையெண்ணும் ஜனநாயகமுறை தோற்றுவிக்கப்பட்டதோடு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும், சட்டப் பயங்கரவாதத்திற்கும் அத்திவாரம் இடப்பட்டுவிட்டது.
இலங்கை சுதந்திரம் பெற்ற கையோடு தலை எண்ணும் ஜனநாயகம் இனநாயகத்தை மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை பறித்ததோடு தன்னை வெளிப்படுத்தியது.
சட்டரீதியாக 19ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளராக காலனித்துவ ஆட்சியாளர்களால் இந்தியாவிலிருந்து இலங்கை தீவுக்குள் கொண்டு வரப்பட்ட மலையகத் தமிழ் மக்கள் இலங்கைத் தீவின் சட்டரீதியான குடியேற்றவாசிகள்.
அவ்வாறு ஒரு நூற்றாண்டு காலமாக சட்டரீதியாக வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டத்தை, அந்த மக்களினுடைய குடியுரிமையை நூறு ஆண்டுகள் கடந்த பின்னர் 74 வீத பெரும்பான்மையைக் கொண்ட ஜனநாயகத்தின் போர்வையில் உள்ள இனநாயகம் தனது பெரும்பான்மை வாக்குகளால் பறித்து,நாடற்றவர்களாக ஆக்கமுடியும் என்றால் அந்த சோல்பெரி அரசியல் யாப்பு என்பது ஒரு சட்டப் பயங்கரவாதமே.
அது ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் இருப்பிடமே. அது ஒரு சட்டரீதியாக வடிவமைக்கப்பட்ட, இனப்படுகொலை அத்திவார அரசியலமைப்பு என்பதே உண்மையாகும்.
இந்த ஒற்றை ஆட்சி அரசியலமைப்பு இலங்கைத் தீவின் 74 விகித பெரும்பான்மை இனத்தவர்கள் ஏனைய இனத்தவர்களை அடக்குவதற்கான, அழித்தொழிப்பதற்கான, இனப்படுகொலை செய்வதற்கான சட்ட ஆட்சியை நிலை நிறுத்தி உள்ளது.
இங்கே பெரிய மீன் தத்துவம் தொழிற்படுகிறது. பெரிய மீன் இடம் சட்டத்தை வகுக்கச் சொன்னால் பெரிய மீன் யாரையும் யாரும் விழுங்கலாம் என்ற சட்டத்தையே வகுக்கும்.
இங்கே பெரிய மீனின் சட்டம் பார்ப்பதற்கு நியாயமான சமத்துவம் போல தோன்றும். உண்மையில் பெரிய மீனால் சின்ன மீனை விழுங்க முடியும். ஆனால் சின்ன மீனால் பெரிய மீனை விழுங்க முடியாது.
இலங்கை அரசியலமைப்பின் ஒற்றை ஆட்சி முறை
இந்த சட்டம் யாருக்கு இலாபகரமானது? யாரை பலப்படுத்துகிறது? யாருக்கு சேவகம் செய்கிறது? அது முற்றிலும் பெரிய மீனுக்கே சேவகம் செய்யும். பெரிய மீனுக்கே நன்மை அளிக்கும். பெரிய மீன் தன் சமத்துவ சட்டத்தின் பெயரால் சின்ன மீனை விழுங்கிக் கொண்டே இருக்கும்.
சின்ன மீன் தொடர்ந்து அழிந்து கொண்டே இருக்கும். இது இலங்கை தீவில் அளவாற் சிறிய இனத்தவர்களுக்கு பொருத்தமானது.
அவரவர் வாழும் நிலப்பகுதி அவருக்கு உரித்தானது என்ற சட்டம் வரையப்பட்டால் மாத்திரமே அளவால் சிறிய தேசிய இனங்கள் வாழமுடியும். நிலைத்து நிற்கமுடியும். இல்லையேல் அவர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு விடுவார்கள்.
இதுபோலத்தான் இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசியலமைப்பு சிறிய தேசிய இனங்களை அழித்துவிடும் அதற்குரிய பாதுகாப்பை ஒருபோதும் ஒற்றை ஆட்சியினால் வழங்க முடியாது.
இவ்வாறு இலங்கையின் அரசியலமைப்பும், ஒற்றை ஆட்சி முறையும் பல சந்தர்ப்பங்களில் சட்டப் பயங்கரவாதமாக தொழிற்படுவதை காணமுடியும்.
சட்டத்தை ஆக்குவதிலும் சட்டப் பயங்கரவாதம் தொழிற்படும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் சட்டப் பயங்கரவாதம் தொழிற்படும் . அதற்கு ஒரு உதாரணமாக 05-06-1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்கள மொழிச் சட்டம் அது உடனடியாக நடைமுறைக்கு வந்தது என்பதை இன்னொரு பக்கக் கொடூரம்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை
சோல்பரி அரசியல் யாப்பில் உள்ள 29 வது சரத்தில் உள்ள ஏ பி சி டி ஆகிய நான்கு காப்பீடுகள் சிறுபான்மையினருக்கு பாதுகாக்க கூடிய வகையில் சட்ட ஏற்பாடு இருந்தது. அந்த ஏற்பாட்டை மாற்றுவதானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு அது மாற்றப்பட வேண்டும்.
ஆனால் 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறவில்லை ஆயினும் அவர் சிங்கள மொழிச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது மாத்திரமல்ல அதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவந்து சிங்கள மொழி தேர்ச்சி அடையாதவர்களை அரச உத்தியோகத்தில் இருந்தும் நீக்கியும் விட்டார்.
இந்தச் செயலானது இலங்கை அரசியல் யாப்பை மீறி எவ்வாறு தான் வகுத்த சட்டத்தையே, தான் ஏற்றுக் கொண்ட சட்டத்தையே மீறியது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
தனது இன நலத்திற்காக எத்தகைய சட்டமீறல்களையும் இத்தச் சட்டப் பயங்கரவாதம் செய்யும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
அந்த அநீதிக்கு எதிராக சிறுபான்மையினரால் கொண்டுவரப்பட்ட கோடீஸ்வரன் வழக்கு கூட இலங்கை அரசியலமைப்புச் சட்டப் பயங்கரவாதத்தின் மூலம் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு இங்கிலாந்தின் பிரிவினா கவுன்சில் வரை சென்று அங்கு நியாயம் போதிக்கப்பட்டதாயினும் அது நடைமுறைப்படுத்த இலங்கை அரசிடம் அனுப்பப்பட்ட போது இலங்கையின் சட்டம் மீண்டும் தன்னுடைய பயங்கரவாதத்தை காட்டி அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் ஊடாக இழுத்தடிப்பைச் செய்து 72 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டபோது மூன்றில் இரண்டு பெரும்பான்மையினான்மை ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட புதிய அரசியல் யாப்பு சோல்பெரி யாப்பின் சிறுபான்மையினருக்கான சட்ட பாதுகாப்பு ஏற்பாடான 29 ஆவது தரத்தை இல்லாது ஒழித்து சிங்கள மொழிக்கும் பௌத்தம் மதத்திற்கும் முன்னுரிமை கொடுத்து புதிய அரசியல் அமைப்பை நிறுவியது.
இது தலையெண்ணும் ஜனநாயகத்தின் சக்தியை வெளிப்படுத்தியதோடு சட்ட ஏற்பாட்டின் மூலம் இனப்படுகொலையை செய்வதற்கான அங்கீகாரத்தையும் ஜனநாயகத்தின் பெயரால் நிறுவி விட்டது.
இலங்கை தீவின் இனநாயகம் ஒரு சட்டப் பயங்கரவாதமாக தொழிற்பட்டது, இப்போதும் தொழிற்படுகிறது, எதிர்காலத்திலும் தொழிற்படும் என்பதைப் புரிந்து கொள்ள இன்னும் பல உதாரணங்களை காட்ட முடியும்.
பயங்கரவாத தடைச் சட்டம்
இலங்கைத்தீவு ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு என்ற அடிப்படையிலும், பல தேசிய இனங்கள் வாழும் நாடு என்ற அடிப்படையிலும் தேசிய இனங்கள் என்று வருகின்ற போது தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று ஐ.நா சாசனத்தின் ஊடாகவும் இலங்கையில் அளவால் சிறிய தமிழ்த் தேசிய இனம் தனது சுயநிர்ணய உரிமையை கோருவது அதனுடைய ஜனநாயக உரிமை.
அந்த உரிமையை சட்டத்தின் மூலம் தடுப்பதற்கான முதல் ஏற்பாடுதான் 1979 செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம்.
அந்தப் பயங்கரவாத தடைச் சட்டம் அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் மீறி அனைத்து ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்யவும், படுகொலை செய்யவும், காலவரையறையின்றி சிறையில் அடைக்கவும், கொல்லப்பட்டவர்களை மரண விசாரணை இன்றி அடக்கம் செய்யவும் வழி செய்தது.
அத்தகைய ஒரு ஜனநாயக விரோத சட்டமூலத்தை நாடாளுமன்றத்தை பயன்படுத்தியே இலங்கை சிங்கள பௌத்த பேரனவாத அரசு நிறைவேற்றியது. அதை இன்றுவரையும் தொடர்கிறது.
இந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமே 3 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இலங்கை தீவுகள் கொல்லப்பட்டார்கள், 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இலங்கை தீவைவிட்டு துரத்தியடிக்கப்பட்டார்கள்.
அளவால் சிறிய ஈழத்தமிழ் தேசிய இனம் தனது இயல்பான சனத்தொகை வளர்ச்சிவீத விகிதத்தில் இன்று 45 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது இலங்கை தீவுக்குள் வட-கிழக்கில் வெறும் 22 லட்சமே வாழ்கின்றார்கள் என்பதிலிருந்து தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் தொகையின் வளர்ச்சி திட்டமிட்டு இல்லாது ஒழிக்கப்பட்டு இருக்கிறது என்பது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையே.
இது இலங்கை அரசியல் யாப்பினதும், சட்டத்தினதும் சட்டப் பயங்கரவாதத்தின் விளைவே.
இலங்கை இந்திய ஒப்பந்தம்
இவ்வாறுதான் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலை என்பது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமைத் தளபதி ஜனாதிபதியின் அனுசரணையுடனே நிகழ்ந்தது.
முப்படைகளுக்கு தலைமை தாங்க வல்ல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தலைநகரத்தில் நடந்த படுகொலைகளை தடுத்து நிறுத்தாமல் மூன்று நாட்கள் காத்திருந்தது என்பதும் அதன் பின்னர் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது என்பதும் ஒற்றை ஆட்சி அரசியலமைப்பில் ஜனாதிபதி முறமையும் ஒரு இனப்படுகொலையின் அங்கமாகவும் சட்டப் பயங்கரவாதத்தின் ஒரு அங்கமாகவும் தொழிற்பட்டதை காணமுடிகிறது.
ஜூலை படுகொலையோடு அதன் சூடு ஆறுவதற்கு முன்னமே ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஆறாம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி தேசிய இனங்கள் தனது சுயநிர்யண உரிமையை கூறுவதை சட்ட ரீதியாக குற்றம் என்றும், அது தேசத் துரோகம் என்றும் சட்ட ஏற்பாட்டின் ஊடான சட்டப் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.
இலங்கை பௌத்த சிங்கள பேரினவாதம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டமும் அதனுடான வடகிழக்கு இணைந்த மாகாணமும் சிங்கள நாடாளுமன்றத்தாற் கொண்டுவரப்பட்டது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது ஒரு சர்வதேச ஒப்பந்தம் என்பதை யாரும் மறுத்திட முடியாது அதில் பல குறைபாடுகள் உண்டு. அது தமிழ் மக்களுக்கு நன்மை அளிக்கவில்லை.
ஆயினும் அது ஈழத் தமிழர் பிரச்சனைக்காக ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வை பெற்று தருவதற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
அந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு ஒரு பிராந்திய அலகை பெற்றுத்தரும் நோக்கத்தைக் கொண்டிருந்தது என்பதையும் மறுத்திட முடியாது.
வட - கிழக்கு இணைப்பு
அந்த அடிப்படையிற்தான் வடக்கு -- கிழக்கு தமிழர் தாயகம் என ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு தற்காலிக ஏற்பாடாக இணைக்கப்பட்டது. அதனை இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தனது அதிகாரபூர்வ அறிவிப்பு ஊடகமான வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி இணைப்புச் செய்திருக்கிறார்.
அதனை அவர் நாடாளுமன்றத்தின் மூலம் இணைப்புச் செய்யவில்லை .எனவே அது சட்ட ரீதியான இணைப்பு அல்ல என்று இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பலவீனமான ஓட்டையை பயன்படுத்தி இன்று இலங்கையின் ஆட்சியைப் பிடித்திருக்கின்ற ஜேவிபி 14-07-2006 உச்சநீதிமன்றத்தை நாடி ஒரு சட்டப் பயங்கரவாத தாக்குதலை நடத்தியது.
அது 16-10-2006ல் மாகாண சபை இணைப்பு பிழையானது என்று தீர்ப்பு வழங்கவில்லை . மாறாக ஜனாதிபதி அதனை நாடாளுமன்றத்தின் வாயிலாக இணைக்காது அரச வர்த்தமாணி வாயிலாக அறிவித்தமை சட்ட நடைமுறைக்கு தவறானது என்று தீர்ப்பு வழங்கியது.
இதனடிப்படையில் 01-01-2007 வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன.
இணைப்பை சட்டரீதியாக இணைத்த முறைமை தவறு என்று மட்டுமே கூறி இந்த வட-கிழக்கு இணைப்பு என்பது சட்டரீதியாக செல்லுபடி அற்றது என்றே நீதிமன்றம் தீர்ப்பு வந்ததன் பிற்பாடும் இறுதியாக இருந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் கீழ் இருந்த இரண்டு நாடாளுமன்றங்களும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்தன.
உண்மையில் இலங்கை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் நினைத்திருந்தால் நாடாளுமன்றத்தின் வாயிலாக வட - கிழக்கு இணைப்பை அறிவித்திருக்க முடியும்.
இனப்படுகொலைக்கு சட்டமே பாதுகாப்பு
ஆனால் இங்கே இனநாயகத்தின் பெயரால் சட்டப் பயங்கரவாதமே தொழில்பட்டிருக்கிறது. அந்தச் சட்டப் பயங்கரவாதத்தை தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மீது பிரயோகித்து அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஜேவிபி கட்சியின் தலைவர்தான் இன்று இலங்கையின் ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.
இன்று இலங்கை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் இலங்கையர் என்ற கோஷமும் , ஒரு மக்கள் , ஒரு நாடு என்ற கோஷமும் முன்வைக்கப்படுகிறது.
அத்தகையவரால் இலங்கையின் வட-கிழக்கு தாயகத்தை வாழ்விடமாகக் கொண்ட ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு நீதியை வழங்க முடியுமா ? அவரால் இலங்கைத்தீவில் இனநாயகத்தை ஒழித்து தேசிய இனங்களுக்கான ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியுமா?
இனப்படுகொலைக்கு சட்டமே பாதுகாப்பு வழங்குகிறது. சட்டமே இனப்படுகொலையை மேற்கொள்கிறது. சட்டமே படுகொலையாளியை பாதுகாக்கிறது. இது என்ன கொடுமை ஜனநாயகத்தின் பெயரால் இவை அனைத்தையும் இலங்கைத்தீவில் நடத்த முடிகிறது. இத்தகைய சட்ட பயங்கரவாதத்தை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
தொடரும்----
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Santhru அவரால் எழுதப்பட்டு, 07 October, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
