வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை! யாழில் அமைச்சர் நாமல் தெரிவிப்பு
வடக்கில் பொது மக்களுக்கு எதிரான வன்முறைகளில் எவராவது ஈடுபடுவார்களாயின் அதற்கெதிராக தெளிவான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் அங்கு இடம்பெரும் சமகால அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“சிலருக்கு பிரச்சினைகள் இருக்குமாயின் பொலிசில் முறைப்பாடு செய்ய முடியும். நாட்டின் பொது மக்களின் பாதுகாப்பே முக்கியம். இதேபோன்று தேசிய பாதுகாப்பு முதலாவது விடயம்.
அமைதிக்கு எதிரான பிரச்சினை இருக்குமாயின் பொலிசில் முறைப்பாடு செய்யுங்கள் தெளிவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
கொவிட் தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் பாரிய நடவடிக்கைகளை நாடு முழுவதும் மேற்கொண்டுள்ளது. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது யாழ்ப்பாணத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்றுவருகிறது.
நாட்டின் இளம் சமூகத்தினருக்கு தடுப்பூசி வழங்கும் செயல்திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் மக்களும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயல்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை வலுவூட்ட ஒன்றிணைந்து செயல்படுமாறு அமைச்சர் நாமல் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார்.
நாட்டில் நாளொன்றுக்கு ஆகக்குறைந்தது 400 மத்திய நிலையங்களில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் தான் ஜனாதிபதி சௌபாக்கிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
தற்போது இதுவரையில் 280 பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேபோன்று சிறியளவிலான சுமார் 25 ஆயிரம் அபிவிருத்தித்திட்டங்கள் அமைச்சுக்கள், ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி விசேட ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.பொருட்கள் பதுக்கப்படுமாயின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று தேசிய பொருளாதாரம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று தேசிய வர்த்தகமும் வலுவடைந்துள்ளது. அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதை கண்டறிவதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்தோம்.
இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவற்றை அடையாளங்கண்டு அவற்றுக்கு ஆவண செய்வதுடன் ஜனாதிபதி அறிமுகப்படுத்திய வேலைத்திட்டங்களை யதார்தமாக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதும் நோக்கமாகும்.
எதிர்வரும் காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் கண்காணிப்புடன் உரிய நேரத்தில் சிறப்பாக அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறைவு செய்து கிராம மக்களின் அபிவிருத்திக்கு வழி செய்வதே எமது அபிலாசையாகும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது நாவற்குழியில் அமைக்கப்பட்டுவரும் யாழ் கிளிநொச்சி நீர் விநியோகம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளையும் அமைச்சர் நாமல் ராஜபக்ச பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.