வாழைச்சேனையில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்
வாழைச்சேனை - கிண்ணியடி வாவியின் நடுவில் உள்ள மேட்டுநில காட்டு பகுதியில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிஸார் நேற்று (21) பகல் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை கைது செய்ததுடன் 6 தாங்கிகள் கொண்ட 1080 லீற்றர் கோடா, 30 லீற்றர் கசிப்பு என்பவற்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றில் முன்னிலை
கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பகுதிக்கு சம்பவ தினமான நேற்று பகல் கிழக்கு மாகாண குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி. மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தோணி மூலம் வாவியில் பிரயாணித்து குறித்த பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு சட்டவிரோத கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவரை கைது செய்ததுடன் 6 பெரல் கொண்ட 1080 லீற்றர் கோடா, 30 லீற்றர் கசிப்பும் மற்றும் உற்பத்தி உபகரணங்களை மீட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, இந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி குழுவைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் கசிப்பு உற்பத்தி செய்வதற்கு வாவியில் பிரயாணித்த போது முதலை தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.






