சர்வதேச நாடுகளின் தூதுவர்களுடன் சஜித் அவசர கலந்துரையாடல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று முற்பகல் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றின் தூதுவர் டெனிஸ் சாய்ப், பிரான்ஸ் தூதுவர் எரிக் லேவவர்டு, இத்தாலி தூதுவர் றீட்டா குய்லானா, ஜேர்மனி தூதுவர் ஹோல்கர் சுபர்ட், ரோமேனிய தூதுவர் விக்டர் சூடேயா ஆகிய ராஜந்திரிகள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
கோவிட் வைரஸ் பரவலால் உலகம் எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமை, இலங்கை எதிர்நோக்கி வரும் நிலைமை தொடர்பாக இதன் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பலவீனம் சம்பந்தமாகவும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு மிக மோசமான அடக்குமுறை ஆட்சியொன்றை கையாள அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அரசாங்கத்திற்கு சவாலான பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறிக்கும் அளவிற்கு அரச அடக்குமுறை கையாளப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பியாவின் முக்கிய நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகின்ற நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு விசேட கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு சீனாவுக்கு மேற்குலகம் கூறும் செய்தியா அல்லது சஜித் பக்கம் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்துகின்றனவா என அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.