யாழ். மாவட்ட ஆயரை சந்தித்து கலந்துரையாடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நிலையில் பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று(23) காலை 10 மணிக்கு அனலைதீவிலும், மாலை 2 மணிக்கு சண்டிலிப்பாயிலும், மாலை 4 மணிக்கு வட்டுக்கோட்டை மூளாயிலும், மாலை 5 மணிக்கு அளவெட்டி கும்பலையிலும், மாலை 06.30 மணிக்கு றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் சனசமூக நிலைய விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டங்களிலும் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளவுள்ளார்.
நல்லை ஆதீனத்தை சந்தித்த சஜித்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் காலை 10 மணியளவில் நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
நல்லூரில் உள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பின் போது செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் விஜய்காந்த், யாழ் மவட்ட அமைப்பாளர் கு.மதன்ராஜ், தொகுதி அமைப்பாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் வருகை தந்து பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இரண்டு பாடசாலைகளுக்கு பேருந்து வழங்குவதாக சஜித் உறுதி
யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு பெண்கள் பாடசாலைகளுக்கு பேருந்து வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் உறுதி அளித்ததாக அகில இலங்கை இந்து மா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
இன்று நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று நல்ல ஆதீனத்திற்கு வருகை தந்தார் ஆதீன சுவாமிகளுடன் அகில இலங்கை இந்து மாவட்டத்தின் சார்பில் நானும் அவருடன் கலந்துரையாடினோம்.
அவரிடம் மிக முக்கியமாக நாம் விடுத்த வேண்டுகோள் கீரிமலை காங்கேசன் துறை வீதியில் இருக்கின்ற ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இருக்கின்ற கோயில்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அதை விடுவிக்கின்ற முயற்சியினை நீங்கள் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்க வேண்டும்.
அதேபோல தல்செவன விடுதிக்கென பயன்படுத்தப்படுகின்ற 200 வருடம் பழமை வாய்ந்த திருகோணசத்திரம் என்கின்ற சிவபூமி அறக்கட்டளைக்குரிய அந்த நிலத்தினை விடுவிக்க வேண்டும்.
மேலும் ஒரு கோரிக்கையினை முன்வைத்திருந்தோம், ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவரால் நாட்டில்சில பாடசாலைகளுக்கு பேருந்து வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற இரண்டு பெண் இந்து பாடசாலைகள், அதாவது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, தேசிய வீரராக கருதப்பட்ட ராமநாதனுடைய பாடசாலையாகிய இராமநாதன் இந்து கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளும் பேருந்து இல்லாமல் இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு பேருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். அதற்கு அவர் அது வழங்க முடியும் நான் அதனை பரிசீலித்து விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கின்றேன் எனத் தெரிவித்தார். மேலும் வீட்டுத்திட்டத்தை உங்களுடைய தந்தையார் பிரேமதாசா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
அது ஒரு நல்ல பணி இருநூறு வருடமாக மலையகத் தமிழர்கள் இன்னும் அடிமையாக வீடு வாசல் இல்லாது இருக்கின்றார்கள் அவர்களுக்கும் நன்றியோடு வீட்டு திட்டம் வழங்குகின்ற முயற்சியில் தாங்கள் ஈடுபட வேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம் என தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்த சஜித்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை யாழ். மறை மாவட்ட ஆயர் மற்றும் நல்லை ஆதீன குரு முதல்வரையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
சந்திப்பு முடிவுற்றதும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு தொடர்பில் வினவியபோது
என்னால் ஊடகங்களுக்கு கருத்து சொல்ல முடியாது விரும்பினால் மாலையில்
இடப்பெறும் தேர்தல் கூட்டத்தில் உரையாற்றுவேன் அங்கு வந்து பதிவிடுங்கள் என
தெரிவித்து அவ்விடத்தில் இருந்து நழுவிச் சென்றார்.

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
