அக்குரேகொட இரட்டைக்கொலை: பாரபட்சம் பாராது நீதி வேண்டும்! சட்டத்தரணிகள் கோரிக்கை
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட மிலேச்சத்தனமான சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகளும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் இன்று(16.02.2026) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இரட்டை கொலை
.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ராஜீவ் அமரசூரியவின் அழைப்பிற்கு இணங்க, நேற்று(15) மாலை இடம்பெற்ற விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் புண்ணியவதி துஷ்யந்தன் தலைமையில் இன்று(16) காலை ஒன்றுகூடிய சட்டத்தரணிகள், கறுப்புப் பட்டி அணிந்து தமது கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது..
இதன்போது கருத்துத் தெரிவித்த தலைவர் புண்ணியவதி துஷ்யந்தன், "சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டப் போராடும் ஒரு சட்டத்தரணிக்கே இந்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பது மிக மோசமான நிலைமையாகும்.

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இந்த 'கொலை கலாசாரம்' உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். எமது சக சட்டத்தரணியினதும் அவரது மனைவியினதும் படுகொலை ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.
குற்றவாளிகள் தராதரம் இன்றி உடனடியாகக் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதுவரை எமது போராட்டங்கள் ஓயாது," என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


நுவரெலியா
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று(15) தீர்மானம் எடுத்துள்ளது.
இதற்கு ஆதரவு தெரிவித்து, இன்று(16.02.2026) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு ஒத்திவைப்பு
இதன்போது, நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஹட்டன் நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சட்டதரணிகள் வருகை தராததன் காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றங்களின் சில வழக்குகள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு வந்திருந்த வழக்குகளுக்கு வழக்கறிஞர்கள் முன்னிலையாகாத காரணத்தால் அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலதிக தகவல் - தீவாகரன்
மட்டக்களப்பு
கொழும்பில் சட்டத்தரணியொருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் படுகொலைசெய்த கொலையாளிகளை கைதுசெய்து சட்டத்தினை நிலைநாட்டுமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் இன்று(16.02.2026) நீதிமன்ற கடமைகளிலிருந்து விலகி இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
சட்டத்தரணிகளின் கோரிக்கை
இதன்போது, சட்டத்தரணிகள் உட்பட பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகும் சூழ்நிலையேற்றபட்டுள்ளதன் காரணமாக துப்பாக்கிதாரிகள் கைதுசெய்யப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக ஒன்றுகூடிய சட்டத்தரணிகள் அமைதி முறையில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் தியாகேஸ்வரன் தலைமையில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதுடன் சட்டத்தரணிகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

மேலதிக தகவல் - குமார்
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட மிலேச்சத்தனமான சம்பவத்தைக் கண்டித்து, கந்தளாய் நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று(16.02.2026) பாரிய கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று(16.02.2026) காலை கந்தளாய் நீதிமன்றத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய சட்டத்தரணிகள், தமது கைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்து, கண்டனப் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது இந்த இரட்டைப் படுகொலையை வன்மையாகக் கண்டித்த அவர்கள், குற்றவாளிகளுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தினால், கந்தளாய் நீதிவான் நீதிமன்றத்தின் அன்றாட நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்தன.
கோரிக்கை
சட்டத்தரணிகள்எவரும் இன்று நீதிமன்றக் கடமைகளில் ஈடுபடாது தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதால், வழக்கு விசாரணைகள் அனைத்தும் தடைப்பட்டன.

நீதித் துறையைச் சார்ந்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இத்தகைய வன்முறைகள் ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் எனப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
சட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியவர்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது கவலைக்குரியது எனத் தெரிவித்த சட்டத்தரணிகள், இச்சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - யூசுப்
யாழ்ப்பாணம்
சட்டத்தரணி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று(16.02.2026) முழு நேர பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். சட்டத்தரணிகளின் குறித்த போராட்டத்தால் யாழில் இன்று வழக்குகளை எதிர்கொண்ட பலர் இடர்பாடுகளுக்கு உள்ளாகியிருந்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவியும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கருதப்படுகின்றது.
நாட்டில் 7 துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவு
இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.

அத்துடன், இந்த தாக்குதல் நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தல் என்றும், குற்றவாளிகளைத் தாமதமின்றி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், நாட்டில் 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் - தீபன்
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam