லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கு விவகாரம்! சட்டமா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்
சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் பிரதிக்காவல்துறை அதிபர் ஜயந்த விக்கிரமரட்னவை கைது செய்ய போதுமான சாட்சியங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் சார்பில் மேலதிக மன்றாடியார் நாயகம் ஆயிஸா ஜினசேன இன்று உயர் நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், மனுதாரரான ஜயந்த விக்கிரமரட்னவை கைது செய்வதற்கான அச்சம் உடனடியாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறுக் கோரி ஜயந்த விக்கிரமரட்ன தாக்கல் செய்த மனு தொடர்பிலேயே இந்த அறிவிப்பை மேலதிக மன்றாடியார் இன்று உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த மனு தொடர்பில் உயர்நீதிமன்றம், ஜயந்த விக்கிரமரட்னவை கைது செய்வதற்கு எதிராக இடைக்கால தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லசந்த விக்கிரதுங்க கொலை தொடர்பில் முன்னதாக பிரதி காவவல்துறை அதிபர் ஜயந்த
விக்கிரமரட்ன உட்பட பல அதிகாரிகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.