லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் ஜனாதிபதியிடம் கோரிக்கை
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்கள் மூவரை விடுதலை செய்வது தொடர்பான சட்டமா அதிபரின் பரிந்துரை குறித்து, ஊடகப்பரப்பு உரிமைக்குழுக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
அத்துடன்; தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முன்னதாக தேர்தல் மேடையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, குறித்த குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், ஊடக ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியவை இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளன.
சட்ட நடவடிக்கை
லசந்த கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்கள் மூவருக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநருக்கு, சட்டமா அதிபர் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதை அடுத்தே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவும், அத்தகைய பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதில் சுயாதீன நீதித்துறையின் அதிகாரத்தை பாதிக்காது என்றும், அநுரகுமார திசாநாயக்க, தேர்தல் பரப்புரைகளின் போது தெரிவித்திருந்தார்.
எனினும், தற்போது சட்டமா அதிபரின் செயற்பாடு, பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக ஊடகக்குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. முன்னதாக 2025 ஜனவரி 27ஆம் திகதியன்று, குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குநருக்கு, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க எழுதிய கடிதத்தில், லசந்த விக்ரமசிங்க கொலை வழக்கின் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சார்ஜென்ட் அதிகாரி பிரேம் ஆனந்த உடலகம, கல்கிஸ்ஸ குற்றப்பிரிவு முன்னாள் அதிகாரி திஸ்ஸசிறி சுகதபால மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி பிரசன்ன நாணயக்கார ஆகியோருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்ய விரும்பவில்லை என்றும் சட்டமா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |