மின்சாரம் எரிபொருள் மானியங்கள் விரைவில் நீக்கப்படும்..
எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் கிரமமான முறையில் நீக்கப்படும் என அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இணைந்து, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முக்கிய முடிவுகள்
நாணய நிதியத்தால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள இந்த கடிதத்தில் நாட்டின் பொருளாதாரம் சார்ந்த பல முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செலவுகளை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளை நிர்ணயிக்கும் நடைமுறை தற்போது சரியான பாதையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்திய மற்றும் காலநிலை தாக்கங்கள் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள், மின்சாரம், உரம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கான மானியங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த எரிசக்தி மற்றும் ஏனைய மானியங்களுக்கான செலவு 100 பில்லியன் ரூபா என்ற அதிகபட்ச எல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனைத்து நிவாரணப் பணிகளும் வரவுசெலவுத் திட்டத்தின் மூலமே ஈடுசெய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடின முயற்சிகளுக்கு மத்தியில் எட்டப்பட்ட நிதி ஸ்திரத்தன்மை மற்றும் கொள்கை ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்காக, இந்த மானிய முறைகளை எதிர்வரும் 2026 செப்டம்பர் மாத இறுதிக்குள் படிப்படியாக நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது.
மேலும் தேவை ஏற்பட்டால் அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மிகவும் தேவயுடைய மக்களுக்கு தொடர்ந்து நிவாரணங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
695 மில்லியன் டொலர்
2025 டிசம்பர் இறுதிக்குள் எட்டப்பட வேண்டிய அனைத்து அளவுசார் செயல்திறன் அளவுகோல்களையும் குறியீட்டு இலக்குகளையும் இலங்கை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.

அத்துடன், பெப்ரவரி இறுதிக்குள் 22 கட்டமைப்பு இலக்குகளில் 16 இலக்குகளை அரசாங்கம் நிறைவு செய்துள்ளது.
எனினும், சைபர் குற்றமொன்று காரணமாக சில வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகள் தாமதமானதால், 'புதிய வெளிநாட்டுக் கொடுப்பனவு பற்றாக்குறைகளை ஏற்படுத்தாதிருத்தல்' என்ற தொடர்ச்சியான செயல்திறன் அளவுகோலை மட்டும் சிறிய அளவில் பூர்த்தி செய்ய முடியாமல் போனதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த சைபர் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில், எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் புதிய கடன் மேலாண்மை தகவல் அமைப்பொன்றை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையின் சாதகமான செயல்திறனைக் கருத்திற்கொண்டு, EFF திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, 508 மில்லியன் எஸ்டிஆர் (SDR) – அதாவது சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை விடுவிப்பதற்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கம் நாணய நிதியத்தின் நிர்வாகச் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட வெளிநாட்டுக் கடன் தாமதத்திற்கு தள்ளுபடி அங்கீகாரம் (Waiver) வழங்குமாறும், 2026 டிசம்பர் மற்றும் 2027 பிப்ரவரி வரையிலான புதிய கட்டமைப்பு மைல்கற்கள் மற்றும் இலக்குகளுக்கு அனுமதி வழங்குமாறும் இலங்கை அரசாங்கம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இலங்கை விஞ்ஞானியின் அசாத்திய கண்டுபிடிப்பு - பார்வையற்றவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan