நாட்டில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் மண்சரிவு அபாயங்கள் தொடர்ந்தும் நீடித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண் சரிவு ஏற்படக்கூடிய அதி ஆபத்தான 15000 இடங்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதி ஆபத்து மண் சரிவு வலயங்களில் இருந்து மக்கள் கட்டாயமாக வெளியேற வேண்டும் என தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
நான்கு மாவட்டங்களில் நான்கு பிரதேச செயலகங்களில் உள்ளடக்கிய 41 பிரிவுகளில் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிகப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவப்பெயர்ச்சி மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனால் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் குடியேறுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.