தொல்லியல் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பறிமுதல் - சிறிநாத் எம்.பி பகிரங்கம்
வடக்கு கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியானது என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் இந்த அரசு செய்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பொருளாதார நிலைமை
மிக முக்கியமாக சமகால அரசு பல வாக்குறுதிகளை தந்திருந்தது இருந்தபோதும் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை சம்மந்தமாக இந்த அரசு ஆட்சியை பொறுப்பேற்று ஒன்றரை வருடம் ஆகியும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாத ஒரு நெருக்கடியான சூழ்நிலை இருக்கிறது

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதார பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கு பல விடயங்கள் கூட இன்று பாரியளவில் கொண்டு செல்லப்படாமல் இருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அண்மையில் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பல விடயங்கள் முன்வைக்கின்ற முக்கியமாக கித்துள் முந்தனை ஆறு நீர் பாசன திட்டம் சம்பந்தமாக மாவட்டத்தில் அடிப்படையாக விவசாயம் பொருளாதாரத்தையும் அதோடு மீன்பிடி வெள்ள தடுப்பு நடவடிக்கை எதிர்கால குடிநீர் தேவைகொண்டு செல்ல வேண்டிய திட்டம் ஒதுக்கப்பட்ட ஆய்வுகளுக்கான நிதியில் ஒரு வீதம் பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை காட்டப்பட்டது.
இது மிக மனவருத்தமான விடயம் அது மட்டுமல்ல அது சம்மந்தமாக கேள்வி எழுப்பி இருந்தோம் அதற்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.
தமிழ் மக்களின் பாரிய வாக்குகள்
கடல்சார் அபிவிருத்தியை கொண்டுவருவதற்கு களுவங்கேணி பகுதியில் ஒரு மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை கோரியிருந்தோம் அதற்கான நிதி ஆரம்ப காலங்களில் கொடுக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தும் எமக்கு அறிவிக்கப்படாமல் பிரதேச அபிவிருத்தி கூட்டங்களில் உறுதிமொழி அளித்தனர்.
அதனை வேறு தேவைக்கு மாற்றப்பட்டதாக கடந்த மாவட்ட அபிவிருத்தி குழுவில் கூறப்பட்டது இவ்வாறு மேய்ச்சல் தரை, விவசாயம், மீன்பிடித்துறை போன்றவற்றை அபிவிருத்தி செய்வதற்கான எந்த ஒரு சிறந்த திட்டமிடல் முறைமையும் இல்லாது தமிழ் மக்கள் மீது பல நெருக்கடிகளை கொண்டு வருகின்றனர்.

ஆகவே இவ்வாறான விடயங்களை அரசு மிக பொறுப்பான முறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளக் கூடிய வகையில் கையாள வேண்டும் தென்னிலங்கையில் இருக்கின்ற இனவாத சக்திகளுக்கு பயந்தே அதனை கைவிட்டு தற்போது துணிச்சலாக பல சந்தர்ப்பங்களில் நடவடிக்கை எடுப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல விசாரணைகளை முன்னெடுத்து பல பேரை கைது செய்வதுடன் போதைப்பொருள் பாதாள குழுக்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஊழல் மற்றும் இலஞ்சம் விடயங்களை முன்னெடுத்து செல்கின்ற இந்த அரசாங்கத்துக்கு ஏன் தென்னிலங்கையில் இருக்கும் இந்த இனவாத சக்தி சக்திகளுக்கு பயந்து கொண்டு இந்த விடயங்களை மெதுவாக மந்தமாக கையாளுகின்றதா? அல்லது அரசுக்கும் அடிப்படையாக தமிழ் தேசியம் சார்ந்த விடயங்கள் வளர்ந்து விடக் கூடாது என்ற எண்ணம் இருக்கிறதா? என சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய நிலைமை இருக்கின்றது.
எனவே இதனை நீக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் பாரிய வாக்குகளை பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.