குருந்தூர்மலை கிராம மக்களின் அபகரிப்புக்குள்ளான காணிகள்: சாள்ஸ் நேரில் சென்று ஆராய்வு (Photos)
குருந்தூர்மலை பிரதேசத்தை அண்டிய தண்ணிமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பூர்வீக காணிகள் தொடர்பில் ஆராயும் நோக்கோடு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
குருந்தூர்மலை பிரதேசத்தை அண்டிய தண்ணிமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பூர்வீக காணிகள் மீள் குடியேற்றத்தின் பின்பு சில வருடங்களாக வனவள திணைக்களத்தின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.
அத்தோடு குருந்தூர் மலையை அண்டிய சில மக்களின் காணிகளும் பயிர் செய்கைக்கு குருந்தூர் மலையில் உள்ள பௌத்த பிக்குவால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த காணிகள் தொடர்பில் ஆராயும் நோக்கோடு நாடாளுமன்ற உறுப்பினர் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
பூர்விக காணிகளிலே தமது வாழ்வாதாரம் தங்கி இருப்பதாகவும் தமது பூர்வீக காணிகளை வன வள திணைக்களத்தினரிடம் இருந்தும் பௌத்த பிக்கு மற்றும் தொல்லியல் திணைக்களத்திடமிருந்தும் மீட்டுத் தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கவனத்திற்கு மக்கள் கொண்டு சென்றதின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனது கோரிக்கையை ஏற்கனவே முன்வைத்திருந்தார்.
அதன் பிரகாரம் இன்று (27) தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பிரதேசத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்,வனவள திணைக்களத்தினர், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக உதவி அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த காணி விடுவிப்பு தொடர்பான தற்போதைய நிலமை தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், கையகப்படுத்தப்பட்டுள்ள இக் காணிகள் சட்டங்களுக்கு அமைவாக விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் வனவள திணைக்களத்தினர் இதன்போது தெரிவித்துள்ளனர்.
காணிகளை விடுவிப்பதற்கு உரிய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது மக்களிடம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.









