கிளிநொச்சி மக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக மாவட்டச் செயலகம் வெளியிட்ட தகவல் (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் ஆறாயிரத்து 246 ஏக்கர் வரையான காணிகள் வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்கள் என்பவற்றிலிருந்து விடுவிக்க வேண்டிய தேவை காணப்படுவதாக மாவட்டச் செயலக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பொது மக்களின் பயன்பாட்டிலும் பயிர்செய்கை நடவடிக்கைகளிலும் உள்ள காணிகள் மற்றும் மேற்படி திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்ட்டுள்ளது.
சுமார் ஆறாயிரத்து 246 ஏக்கர் வரையான காணிகள் வன வள திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றில் இருந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகளை விடுவிப்பது தொடர்பில் பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கடந்த ஜனவரி மாதம் 07ம் திகதி மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகளால் கள விஜயம் மேற்கெளாள்ளப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட மேற்படி காணிகளை விடுவிப்பது தொடர்பான தொடர் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டாயிரத்தி 395 ஏக்கர் வரையான 16 காணிகளும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 608 ஏக்கர் வரையான ஆறு துண்டுகளும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 1410 ஏக்கர் வரையான எட்டு காணித் துண்டுகளும் வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்தும் கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவில் 513 ஏக்கர் வரையான நான்கு காணித் துண்டுகளும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து ஆயிரத்து 320 ஏக்கர் 02 ரூட் 33 பேர்ச் காணிகள் வனஜீவராசிகள்திணைக்களத்தினாலும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக மாவட்டச் செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காணிகளை விடுவிப்பது தொடர்பாக பரிசீலனை செய்வதற்கு ஏதுவாக பொருத்தமான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு வனவளத் திணைக்களத்தினால் கோரப்பட்டதற்கமைவாக கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி மாவட்ட செயலகத்தினால் 12 கோவைகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
