கிளிநொச்சியில் பொது வீதியில் சட்டவிரோத மதில் அமைத்துள்ள நபர்: எதிர்ப்பு வெளியிட்டுள்ள மக்கள்
கிளிநொச்சி (Kilinochchi) - பரந்தன் குமரபுரம் கிராம அலுவலர் பிரிவு - 06 வீதி, 17ஆம் பாதையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மதிலை அகற்றுமாறு கோரி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
குறித்த பாதையில், புலம்பெயர் வாசி ஒருவரால் சட்டவிரோதமாக மதில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரைச்சி பிரதேச சபையால் இவ்வருட ஆரம்பத்தில் கனகரக வாகனம் மூலம் அந்த மதில் உடைத்து அகற்றப்பட்டது.
பிரதேச சபை
இந்த விடயம் தொடர்பில் கிராமவாசிகள் சிலரால் கரைச்சி பிரதேச சபையின் கவனத்திற் கொண்டு சென்ற போது குறித்த மதில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
மதில் அமைக்கப்பட்டுள்ள பாதையானது, 16 அகலம் கொண்ட பாதையாக உள்ள போதும் அந்த புலம்பெயர் வாசி, பாதைக்கு நான்கு அடி அகலத்தை மட்டும் விட்டு மதில் அமைத்துள்ளார்.
அதேவேளை, மதில் அமைக்கும் முன் சட்டரீதியாக கரைச்சி பிரதேச சபையிடம் அதற்கான அனுமதியினை அவர் பெற்று கொள்ளவில்லை.
எனவே, இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டாவளை பிரதேச செயலாளரிடம் முறையிட்ட போது பிரதேச செயலாளரும் குறித்த சட்டவிரோத மதில் அமைக்கும் பணியினை நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவித்துள்ள நிலையில் அந்த நபர் அதனை கருத்தில் கொள்ளாது அவர் மீண்டும் மதிலை அமைத்துள்ளார்.
ஆகையால், இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், ”குமரபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மதில் சட்டவிரோதமானது. ஏற்கனவே, நாம் குறித்த மதிலை உடைத்து அகற்றியிருந்தோம்.
இருப்பினும், அவர் தற்போது சட்டவிரோதமாக மதிலை மீண்டும் அமைத்துள்ளார். எனவே, இனி அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |