முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பில் அமைச்சின் கோரிக்கைக்கு எதிராக ஜனாதிபதி அதிரடித் தீர்மானம்
மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில் நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் எமது செய்திச்சேவை நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதியின் தீர்மானம்
மகாவலி அதிகார சபையினால், முல்லைத்தீவு கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கொக்கிழாய் முதல் நாயாறு வரை இருக்கின்ற 6 கிராம அலுவலர்கள் பிரிவினை மகாவலி அதிகார சபை நிர்வாக அமைச்சின் கீழ் மாற்றுவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், மகாவலி அமைச்சின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தமக்கு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதன்போது தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் 6 கிராம அலுவலர்கள் பிரிவும் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் இயங்குவதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.