பொருளாதார நெருக்கடி:வெளியீடுகளை நிறுத்திய அரச அச்சு ஊடகம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில், இலங்கை அரச அச்சு ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் தனது வார வெளியீடுகளை மாத வெளியீடுகளாகவும் சில சஞ்சிகைகளை வெளியிடுவதை நிறுத்தவும் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக லேக் ஹவுஸ் நிறுவனத்தின் விற்பனை திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அச்சுக்கான காகிதங்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
மாத சஞ்சிகைகளாக மாறிய வார சஞ்சிகைகள்
இதன் காரணமாக எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வார சஞ்சிகைகளான புதுசரண பௌத்த சஞ்சிகையை மாதத்தில் பௌர்ணமி தினத்தில் மாத்திரம் வெளியிடப்படும்.
அத்துடன் தருணி மற்றும் மிஹிர சஞ்சிகைகள் மாதம் தோறும் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
நிறுத்தப்படும் வெளியீடுகள்
மேலும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஆரோக்கியா, சினிமா சஞ்சிகையான சரசவிய, சுபசெத, தமிழ் சஞ்சிகைகளான வண்ண வானவில், குட்டிச் சுட்டி ஆகியவற்றை வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாதாந்தம் வெளியிடப்படும் சஞ்சிகைகளுக்கு சந்தையில் நிலவும் கேள்விக்கு அமைய சஞ்சிகைகளை பெற்றுக்கொள்ளுவதற்காக முன்னறிவிப்பு செய்யுமாறு முகவர்களிடம் கேட்டுக்கொள்வதாக லேக் ஹவுஸ் நிறுவனத்தின் விற்பனை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த நிலையில், தினகரன், தினகரன் வார மஞ்சரி, தினமின, சிலுமின ஆகிய பத்திரிகைகள் வழக்கம் போல் வெளி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.