காலி மாவட்டத்தில் கோவிட் நோயாளிகளுக்கு வைத்தியசாலையில் இடப்பற்றாகுறை
கோவிட் -19 நோயாளிகளை அனுமதிக்க வைத்தியசாலையில் இடப்பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால், காலி மாவட்டத்தை சேர்ந்த 226 நோயாளிகள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தென்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்காக ஆயிரத்து 400 படுக்கைகள் நிரம்பியுள்ளன.
இதனால், புதிதாக கண்டறியப்படும் கொரோனா நோயாளிகளை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெற்றிடம் ஏற்படும் அளவுக்கு நோயாளிகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வீடுகளில் சிகிச்சை அளிக்கப்படும் கோவிட் தொற்றாளர்கள்
தென்னிலங்கையில் பெருமளவு கோவிட் தொற்றாளர்கள் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் ஹபராதுவ பகுதியில் 36 தொற்றாளர்களும், அம்பலங்கொடை பகுதியில் 35 தொற்றாளர்களும், இமதுவ பகுதியில் 13 தொற்றாளர்களும், ரத்கம பகுதியில் 09 தொற்றாளர்களும், காலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 தொற்றாளர்களும், போபே பொத்தல பகுதியில் 08 தொற்றாளர்களும், கரந்தெனிய பகுதியில் 04 தொற்றாளர்களும், பலபிட்டிய பகுதியில் 03 தொற்றாளர்களும், ஹிக்கடுவ பகுதியில் 4 தொற்றாளர்களும், வெலிவிடிய பகுதியில் 2 தொற்றாளர்களும், உடுகம பகுதியில் 2 தொற்றாளர்களும், அக்மிமன மற்றும் எல்பிட்டிய பகுதியில் இரண்டு தொற்றாளர்களுமாக 114 தொற்றாளர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் சந்திம சிறிதுங்கவை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தில் 8 கோவிட் சிகிச்சை நிலையங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் 1400 கட்டில்கள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு கொரோனா தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்கள் அனைத்திலும், கோவிட் தொற்றாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
காலி மாவட்டம் மாத்திரமன்றி, பல்வேறு பகுதிகளிலுள்ள தொற்றாளர்கள், காலிக்கு அழைத்து வரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், சில நோயாளர்களை கோவிட் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.