சஜித் கட்சி உறுப்பினரிடம் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடி
பொதுக்கூட்டம் ஒன்றின் போது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தனவிடம் முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்டத்தரணி மூலம் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
சட்டத்தரணி சம்பத் யாலேவத்த ஊடாக இந்த கடிதத்தில் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 22 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக பிரசாத் சிறிவர்தன பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குமார ஜெயக்கொடி 30 ஆண்டுகளுக்கும் மேலான நிறைவேற்று அதிகாரம் கொண்ட அனுபவம் வாய்ந்த ஒரு தகுதிவாய்ந்த பொறியியலாளர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் தனது தொழில்முறை மற்றும் அரசியல் வாழ்க்கையில் இதுவரை கறைபடாத நற்பெயரைக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, அது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில் அவர் அண்மையில் தனது அமைச்சர் பதவியைத் தானாக முன்வந்து இராஜினாமா செய்திருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசாத் சிறிவர்தனவின் இக்கருத்துக்கள் குமார ஜெயக்கொடியின் தனிப்பட்ட கௌரவத்தைச் சிதைப்பதுடன், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிம்பத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டுச் செய்யப்பட்டவை என அவரது சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.
தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதற்காக 500 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடுப்பனவை 14 நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், சட்ட ரீதியான வட்டி மற்றும் நீதிமன்றச் செலவுகளுடன் அந்தத் தொகையை மீளப் பெறுவதற்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan