இயல்பு வாழ்க்கை திரும்பிய திருகோணமலை
வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்திருந்த திருகோணமலை சின்ன கிண்ணியா சந்தியில் அமைந்துள்ள பிரதான குடிநீர் விநியோகக் குழாய் திருத்தும் பணி இன்று16ஆம் திகதி முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இந்த துரித நடவடிக்கை காரணமாக, கடந்த ஒரு வார காலமாக குடிநீரின்றித் தவித்த கிண்ணியாப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இன்று(16) மாலை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கு காரணமாக, பிரதான வீதியில் புதைக்கப்பட்டிருந்த இந்த குடிநீர் குழாய் பெரும் சேதமடைந்தது. இது கிண்ணியாவில் பல பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை முற்றிலுமாகப் பாதித்தது.

குடிநீர் விநியோகம் தடைப்பட்டதால் பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும், சமையலுக்காகவும் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கினர்.
மேலும் பிரதான வீதி வழியான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.
சீரற்ற வானிலை
இந்தப் பேரிடர் சூழ்நிலையில், கிண்ணியா நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் (NWSDB) ஊழியர்கள் பலத்த சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.

சீரற்ற வானிலை மற்றும் வெள்ளச் சேதங்களுக்கு மத்தியிலும், ஊழியர்கள் இரவு பகல் பாராமல், கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ச்சியாக மேற்கொண்ட கடின உழைப்பின் விளைவாகவே இன்று இந்ததிருத்தப் பணி பூரணமாக நிறைவடைந்துள்ளது.
“உண்மையில் இது ஒரு தியாகம் நிறைந்த பணி. குடிநீரின் அவசியம் என்ன என்பதை உணர்ந்து, விடுமுறை பாராமல், பல இன்னல்களுக்கு மத்தியில் எங்கள் ஊழியர்கள் பணியாற்றினர். அவர்களது சேவை பாராட்டுக்குரியது,” என கிண்ணியா நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
