மன்னர் மூன்றாம் சார்லஸ் அரச சின்னம் வெளியீடு: பிரித்தானியாவில் நிர்வாக ரீதியாக ஏற்படவுள்ள மாற்றங்கள்
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் அதிகாரப் பூர்வ அரச சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் அரச கட்டிடங்கள், அரச ஆவணங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் அவரின் புதிய சின்னம் இரண்டாம் எலிசபெத் சின்னத்திற்கு மாற்றாக உபயோகிக்கப்படவுள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்குப் பின்பு அவரின் மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றுக் கொண்டார்.
அதனையடுத்து இரண்டாம் ராணி எலிசபெத்தின் அரச சின்னம் அதிகாரப்பூர்வமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதன் வடிவத்தைத் நேற்றுமுன்தினம் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
இனி அனைத்து அரச கட்டிடங்கள், அரசு ஆவணங்கள் மற்றும் அஞ்சல் பெட்டிகளில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் புதிய சின்னமே உபயோகிக்கப்படவுள்ளது.
மன்னர் மூன்றாம் சார்லஸ் அரச சின்னம்
தங்க நிறத்தில் CIIIR என்று இந்த சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு அர்த்தம் Charles III Rex. Rex என்றால் லத்தின் மொழியில் மன்னர் என்று அர்த்தம்.
C என்ற எழுத்து R என்ற எழுத்துடன் இணைந்து R நடுவில் மூன்று கோடுகள் வரும் படி இந்த சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதின் மேல் மன்னரின் கீரிடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்டிஷ் பதிவாக ஸ்காட்டிஷ் நாட்டுக் கீரிடம் வைக்கப்பட்டு மற்றொரு சின்னத்தையும் உருவாக்கியுள்ளனர்.
மறைந்த இரண்டாம் எலிசபெத்திற்கு EIIR அதாவது Elizabeth II Regina என்று சின்னம் இருந்தது. Regina என்பதற்கு லத்தினில் ராணி என்று அர்த்தம்.
இந்த புதிய சின்னத்தை ஆயுதக் கல்லூரி என்ற அமைப்பு (The College of Arms)வடிவமைத்துள்ளது.
1484ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த கல்லூரின் வேலை அரச சின்னங்களை வடிவமைப்பது மற்றும் அவற்றின் விவரங்களைச் சேகரித்துப் பராமரிப்பது என்பனவாகும்.
புதிய சின்னம்
மூன்றாம் சார்லஸ் மன்னரின் புதிய சின்னத்தை முதலில் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் உபயோகிக்கப்படும்.
அங்குத் தபாலில் CIIIR என்ற சின்னத்தை அச்சிடுவர். அதன் பின்னர் நாட்டில் உள்ள அனைத்து அரச கட்டிடங்கள், அரச ஆவணங்கள், தபால் பெட்டிகளில் மாற்றி அமைக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, வங்கி பண நோட்டுகள், நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் கடவுச்சீட்டுக்கள் போன்றவற்றில் மன்னரின் தலை வடிவம் அமைக்கப்படவுள்ளது.
பிரிட்டன் நாட்டில் மட்டுமின்றி மூன்றாம் சார்லஸ் மன்னர் தலைமையாக இருக்கும் அனைத்து 14 நாடுகளிலும் மன்னரின் தலை சின்னம் மாற்றி அமைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பொருளாதார நிபுணர்களின் கருத்து
இந்நிலையில், ராணியின் மறைவின் பின்னர் பிரித்தானியாவின் நிர்வாக ரீதியாக ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் அவற்றுக்காக செலவழிக்கப்படும் தொகை தொடர்பிலும் பிரித்தானிய பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப்படங்கள், முத்திரைகள், நாணயங்கள் மற்றும் குறிப்புகள் முதல் சில பெயர்கள் என்பன எல்லா இடங்களிலும் உள்ளன.
அவரது கையொப்பங்கள் பிரித்தானியா முழுவதும் உள்ள தபால் பெட்டிகள் மற்றும் அரசாங்க அடையாளங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும் படிப்படியாக அகற்றி, மூன்றாம் சார்லஸ் மன்னரின் புகைப்படங்களை இடம்பெறச் செய்வதற்கு மிக நீண்ட காலம் எடுக்கும் என்றும் வல்லுநர்கள் பல ஆண்டுகள் அல்லது தசாப்தங்கள் கூட நீடிக்கும் என்றும் கூறுகிறார்கள். சிலவற்றை மாற்றவே முடியாது என்றும் கூறுகின்றனர்.
அஞ்சல் பெட்டிகள்
பிரிட்டனில் உள்ள தற்போதைய தபால் பெட்டிகள் ERII (எலிசபெத் ரெஜினா II) என்று குறிக்கப்பட்டுள்ளன. இனி அவை CIIIR என மாற்றப்பட வேண்டும். பிரித்தானியாவில் தற்போது தோராயமாக 1,00,000 தபால் பெட்டிகள் உள்ளன, அவற்றை மாற்றுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.
பிரித்தானியாவின் அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, புதிய அஞ்சல் பெட்டிகளில் மட்டும் இந்த பெயர் மாற்றம் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாணயங்கள்
பிரித்தானியாவில் இனி அச்சடிக்கப்படும் நாணயங்கள் மற்றும் பணத்தாள்களில் அரசர் சார்லஸின் படம் இடம்பெறும்.
ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் எலிசெபத் படம் இடம்பெற்ற நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களின் மூலம் படிப்படியாக திரும்பப் பெறப்படும்.
பிரித்தானிய வங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் மன்னரின் உருவப்படம் கொண்ட புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று கூறியுள்ளது.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் படங்கள் இடம்பெற்ற பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் தேய்ந்து போனால் மட்டுமே மாற்றப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புதிய நோட்டுகள் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் புழக்கத்திற்கு வரும் என்று பிரித்தானிய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மன்னரின் உருவங்களைக் கொண்ட பாலிமர் நோட்டுகள் காகிதத்தால் செய்யப்பட்ட நோட்டுகளுக்குப் பதிலாக வருகின்றன. தாள் £20 மற்றும் £50 நோட்டுகள் செப்டம்பர் 30 க்குப் பிறகு சட்டப்பூர்வ டெண்டரில் இருந்து திரும்பப் பெறப்படும், மக்கள் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் அல்லது அதற்கு முன் டெபாசிட் செய்ய வேண்டும் என்று பிரித்தானிய வங்கி கூறியுள்ளது.
அக்டோபர் 1 முதல், வணிகங்களுக்கு பணம் செலுத்த காகித நாணயத்தைப் பயன்படுத்த முடியாது, இருப்பினும் பிரித்தானியாவில் உள்ள பல வங்கிகள் அவற்றை வைப்புத் தொகையாக ஏற்றுக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாற்றங்களை விட இந்த நாணய மாற்றம் இங்கிலாந்தின் பொருளாதாரத்தையே உலுக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த மாற்றத்திற்கு 10 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவாகும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பணத்தாள்களை மாற்ற செலவழிக்க வேண்டியுள்ளதாக பிரித்தானிய நிபுனர்கள் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.