கிளிநொச்சியில் எரிபொருள் சேகரிப்பு களஞ்சியசாலை காணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்க ஆளுனர் முயற்சி: சிவஞானம் சிறிதரன் கண்டனம்

Kilinochchi S. Sritharan Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Yathu Aug 10, 2022 01:54 PM GMT
Report

கிளிநொச்சி நகரத்திலுள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான எரிபொருள் சேகரிப்பு களஞ்சியசாலை காணியை United Fuel Mart (Pvt) Ltd என்னும் தனியார் நிறுவனத்திற்கு வழங்க வேண்டுமென்ற முன்முனைப்புகளை வடமாகான ஆளுனர் எடுத்துவருவது கண்டனத்துக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் கடிதமொன்றினையும் வடமாகான ஆளுனருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது, 

"கிளிநொச்சி நகர கிராம அலுவலர் பிரிவில், காக்காகடைச் சந்திக்கு அருகிலுள்ளதும், ஆரம்பத்தில் இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான எரிபொருள் சேகரிப்பு களஞ்சியசாலை அமைந்திருந்ததுமான, ஒரு ஏக்கர் 3றூட் 14பேர்ச் விஸ்தீரணமும், நில அளவை வரைபடத்தின்படி 245 ஆம் இலக்கமும் உடைய அரச காணியை (தற்போதுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துடன் இணைந்ததாக) United Fuel Mart (Pvt) Ltd என்னும் தனியார் நிறுவனத்திற்கு வழங்க வேண்டுமென்ற முன்முனைப்புகள் தங்களால் மேற்கொள்ளப்படுவதாகவும், தொடர்புடைய அதிகாரிகளுக்கு அதிகூடிய அழுத்தங்களைப் பிரயோகிக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது.

மேற்குறித்த காணியை இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குவதென்ற தீர்மானம் 2020.09.17 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் 2022.01.13 ஆம் திகதிய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அத் தீர்மானங்களை மீறி, காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவினதோ, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினதோ அனுமதி பெறப்படாது அதே காணியை United Fuel Mart (Pvt) Ltd என்னும் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க முற்படுவது இந்த மாவட்டத்தின் அரச நிர்வாக அலகுகளின் அதிகார வரம்புகளை கேள்விக்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளது.

கிளிநொச்சியில் எரிபொருள் சேகரிப்பு களஞ்சியசாலை காணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்க ஆளுனர் முயற்சி: சிவஞானம் சிறிதரன் கண்டனம் | Kilinochi Sri Lanka Fuel Crisis Sritharan

இலங்கையின் 25 மாவட்டங்களுள், இதுவரை கட்டமைக்கப்பட்ட நகர வடிவமைப்பொன்றைக் கொண்டிராத மாவட்டமான கிளிநொச்சியில், மாவட்டச் செயலகத்தை மையமாகக் கொண்டு புதிய நகர மையத்தை உருவாக்குவதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில், அத்தகைய நகர வடிவமைப்புடன் தொடர்புபட்ட பல்வேறு பொதுப் பயன்பாட்டுத் தேவைகளுக்கான காணிகளைப் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையே காணப்படுகிறது.

இது தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் என்னால் தொடர்ச்சியாக பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றபோதும், தாங்கள் வடக்குமாகாண ஆளுநராக பதவியேற்றத்திலிருந்து இன்றுவரை நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் எவற்றிலும் பிரசன்னமாகாததால் அவை தொடர்பில் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் 

1. கிளிநொச்சி மாவட்டத்தின் நகர வடிவமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் பொதுநூலகத்தை அமைப்பதற்குப் பொருத்தமான காணித்துண்டொன்று நகரமத்தியில் வழங்கப்படவில்லை.

போருக்கு முற்பட்ட காலத்தில் நூலகத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த 6 பரப்புக் காணியும் போருக்குப் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்து, 10 வருட கால போராட்டத்தின் விளைவாக 4 பரப்புக் காணி மட்டுமே தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அக்குறுகிய நிலப்பரப்புக்குள்ளேயே கிளிநொச்சி மாவட்டத்திற்கான பொது நூலகத்தை அமைப்பதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பண்பாட்டு அடையாளமாக, அதன் தோற்றத்திலும், இயங்குதிறனிலும் யாழ்ப்பாண நூலகம் எப்படி மிளிர்கிறதோ, அதே அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான பொதுநூலகம் ஒன்றை நிறுவ வேண்டுமென்பது கல்விப் புலத்தினரின் நீண்டகாலப் பேரவா ஆகும்.

கிட்டத்தட்ட நான்கு வருடகால பிரயத்தனங்களின் மத்தியில், கரைச்சிப் பிரதேச சபையின் நிலையான வைப்பிலுள்ள நிதியைப்பெற்று, புதிய நூலகத்தை நிர்மாணிப்பதற்கான அங்கீகாரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

மரபியல் அடையாளங்களுடன் கூடிய பிரதான நுழைவாயில், சரஸ்வதி சிலையும் முற்றமும், நவீன வசதிகளுக்குட்பட்ட நூல்நிலையம், இணையவழி நூலகம், படிப்பகம், கேட்போர்கூடம், கணினி அறை, திரையரங்கு (ர்ழஅந வுhநயவசந)இ பூங்கா, வாகனத் தரிப்பிடம் உள்ளிட்ட துணைக் கட்டமைப்புக்களுடன் இணைந்ததாக, மன அமைதியையும், வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் தூண்டத்தக்க புறச்சூழல் அமைப்புக்களுடன் கூடிய பொதுநூலக கட்டடத் தொகுதியை புதிதாக நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் அனைத்தும் கைகூடியுள்ள போதும், நகரின் மத்தியில் நூலக அமைவிடத்திற்கு உகந்ததாக, போதிய இடவசதிகளுடன் கூடிய காணியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது.

2. கிளிநொச்சி மாவட்டத்திற்கான புதிய நகரசபையை உருவாக்குவதற்குரிய ஆரம்ப நடவடிக்கைகள் அனைத்தும் முழுமைபெற்றுள்ள நிலையில், நகரசபை உருவாக்கத்திற்கான அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் நகரின் மையத்தில், நகரசபை வளாகத்தை நிறுவுவதற்குரிய காணி இதுவரை அடையாளப் படுத்தப்படவில்லை.

3. கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஓர் நகர மண்டபமோ, கலாசார மண்டபமோ அமைக்கப்படவில்லை என்பதோடு, அதற்கான காணியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தமிழர்களின் கலை, கலாசார, மொழி, பண்பாட்டு, மரபியல்; அடையாளங்களை வளர்த்தெடுக்கும் கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச்சங்கத்திற்கு வெறுமனே இரண்டுபரப்புக் காணியே வழங்கப்பட்டுள்ளது.

4. கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டியங்கும், கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்ட சங்கம், புகைப்படப் பிடிப்பாளர் சங்கம், அழகக தொழில் முயற்சியாளர்கள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் ஆகிய மக்கள் நலன் சார் சமூகமட்ட அமைப்புக்களும், பிரம்ம குமாரிகள் இராஜயோகா நிலையம் என்னும் ஆன்மீக நிறுவனமும் தத்தம் சேவைப்பரப்பை விஸ்தரிப்பதற்கும், நிர்வாக அலுவலகங்களை அமைப்பதற்குமாக, குறைந்தது ஒரு பரப்பு வீதமேனும் தமக்கான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கைகளை நீண்டகாலமாக முன்வைத்தும் இதுவரை அவ்விடயம் சார் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

5. வாழ்வாதார இயலுமைகளை உருவாக்குவதற்காகப் போராடும் முன்னாள் போராளிகள், சுய கைத்தொழில் உற்பத்தித் திட்டங்களை செயற்படுத்தும் வழிவகையற்று வேலைவாய்ப்ப்புக்களை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகள், காலமும் சூழலும் தேவையும் உணர்ந்து தத்தம் பணிளை மக்கள் மயப்படுத்த வாய்ப்பற்றிருக்கும் சிவில் சமூக மற்றும் ஆன்மீக அறப்பணி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுப் பயன்பாட்டுத் தேவைகளுக்குரிய காணித்துண்டுகளை நீண்டகால குத்தகை அடிப்படையிலேனும் பெற்றுக் கொள்வதற்காக மீள்குடியேற்றம் நடைபெற்ற காலத்திலிருந்தே அந்நிறுவனங்கள் முயற்சித்து வருகின்ற போதும் அவற்றுக்குரிய காணிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே இன்றளவும் நிலவுகின்றது.

6. வடக்கு மாகாண சபையின் ஆளுகைக்குட்பட்ட பல திணைக்களங்களின் நிர்வாக அலகுகளை கிளிநொச்சியில் நிறுவுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ள போதும், அவ் அரச திணைக்களங்களுக்குரிய அலுவலகங்களை அமைப்பதற்குப் பொருத்தமான காணிகள் எவையும் இனங்காணப்படவோ, ஒதுக்கீடு செய்யப்படவோ இல்லை.

7. மாவட்டச் செயலக வளாகத்தின் ஒருபகுதி, டிப்போச் சந்திக்கு அருகாமையில் இராணுவ நினைவுத்தூபி அமைந்துள்ள காணி (முன்னர் சந்திரன் பூங்கா அமைந்திருந்த காணி), பொது விளையாட்டு மைதான, பொது நூலகக் காணி உள்ளிட்ட நகர மத்தியிலுள்ள 40 வீதமான காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு இன்னமும் விடுவிக்கப்படாத நிலையே இன்றளவும் தொடர்கிறது.

8. யு.09 வீதியில், பழைய மாவட்டச் செயலகத்துக்கு அருகிலுள்ள, சந்தைப்படுத்தல் திணைக்களத்திற்கு உரித்தான காணி அபகரிக்கப்பட்டு, அக்காணியில் அமைக்கப்பட்ட அனுமதியற்ற கட்டடத் தொகுதியில் தற்போது சதோச விற்பனை நிலையம் இயங்கி வருகின்ற போதும் அதுகுறித்து இதுவரை காலமும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இவற்றுக்கு மேலதிகமாகவும், இந்த மாவட்டத்தின் பொதுப் பயன்பாடுகளுக்கான காணித் தேவை மிகுந்திருக்கும் நிலையில் அக்கறை கொள்ளாது, தங்களுக்கிருக்கும் காணி அதிகாரத்தைப் பயன்படுத்தி, நகர மையத்தை அண்டியுள்ள, பொதுப்பயன்பாட்டிற்கு உகந்த பெருமளவு விஸ்தீரணமுடைய ஓர் அரச காணியை, ((1Ac, 3Rood, 14Perch) காணியை எந்தவித நியாயப்பாடுகளுமற்று, பணபலமும், அரசியற் பின்புலமும் மிக்க தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கவேண்டுமென்று தாங்கள் முனைப்போடு செயற்படுவது எமது மாவட்ட மக்கள் மத்தியில் தங்கள் மீதும், தங்கள் நிர்வாக நடவடிக்கைகள் மீதும் அதிருப்தியையும், மனக்கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான எரிபொருள் சேகரிப்பு களஞ்சியசாலை இயங்கிவந்த குறித்த காணியை தனிநபருக்கு வழங்குவதாயின், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களையும் இணைக்கும், வடக்கு மாகாணத்தின் மத்திய கேந்திர மையமாக உள்ள கிளிநொச்சியில், இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான எரிபொருள் சேகரிப்புக் களஞ்சியசாலை மீள இயக்கப்படாதா? என்ற கேள்வியும் எம் மத்தியில் உண்டு.

போரின் விளைவுகளிலிருந்து முழுமையாக மீண்டும் கட்டமைக்கப்படாத கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவுகின்ற, முக்கியத்துவம் மிக்க எண்ணிலடங்கா காணித்தேவைகளைப் புறந்தள்ளி, அரசியல் பின்புலத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தி இந்த மாவட்டத்தின் வளங்களை அபகரிக்க முற்படும் தனிநபர்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த, காணி அதிகாரமுள்ள மாகாண ஆளுநராக தாங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US